Saturday, 31 March 2018

இதயத்தை தொடவேண்டும்..

பொதுவாக நம் இல்லங்களில்
வயதில் மூத்தவர்கள்
சிறுவர் சிறுமியர்களுடன்
சேர்ந்து விளையாடும்போது
அவர்களுக்கு விட்டுக்கொடுத்து
மகிழ்விப்பது வழக்கம்.

கேரம் போர்டு விளையாட்டானாலும்,
செஸ் விளையாட்டானாலும்,
சீட்டு விளையாட்டானாலும்
பெரியவர்கள் குழந்தைகளோடு
குழந்தைகளாகவே மாறிவிடுவார்கள்.

சிறுவர் சிறுமியர்களுக்கு
விட்டுக்கொடுத்து
வெற்றிபெறவைப்பார்கள்.

விட்டுக்கொடுப்பதை சிறுவர்கள்
அறிந்துகொள்ளமுடியாதபடி
விளையாடுவார்கள்.

சிறுவர்களும் தாங்கள்
உண்மையிலேயே சிறப்பாக
விளையாடி வெற்றிபெற்றதாகவே
நினைப்பார்கள்.

உற்சாகத்தில் திளைப்பார்கள்.

அவர்கள் முகத்தில் தெரியும்
பூரிப்பையும் மகிழ்ச்சியையும்
விவரிக்க சொற்கள் கிடைக்காது.

அதைப்போல் வீட்டிலும்
தொலைக்காட்சி களில்
சிறுவர் சிறுமியர்களுக்குப்பிடித்தமான
தொலைக்காட்சி யை
பார்த்துக்கொண்டிருக்கும்போது
விட்டுக்கொடுப்பார்கள்.

தோற்றுப்போவதுபோல்
தோற்றமளித்தாலும் அவர்களது
இதயத்தை வெல்லுகிறார்கள்.

நம்மில் ஒரு சிலர்
சிறுவர்சிறுமியர்களுடன்
விளையாடும்போது தங்களை
நாயகர்களாகக் காட்டிக்கொள்ள
அவர்களைத் தோற்கடித்து
அந்த பிஞ்சு மனங்களை
நோகடித்து மகிழ்வார்கள்.

அவர்களது ஊக்கம் தளர்ந்து
ஏமாற்றங்கள் தான்
அவர்களது மனதில் தோன்றும்.

வீட்டிலும் அவர்கள் விரும்பும்
தொலைக்காட்சியை
பார்க்க விடாமல்
தங்களது சுயநலத்தை
வெளிப்படுத்தி தங்களுக்கு
பிடித்ததைத்தான் பார்ப்பார்கள்.

பிஞ்சு மனங்களில்
அவர்கள் அறியாமல்
நஞ்சை நன்றாக
விதைக்கிறார்கள்.

நான் 1988-90ல்
கொல்லம் கிளையில்
உதவி நிர்வாக அலுவலர்.

திரு அலிகுட்டிசார் அவர்கள்
உதவிக்கிளைமேலாளர்.

வணிகச்சுற்றுப்பயணத்தை
முடித்த பின்னர் அவர்
தனது அனுபவங்களை
என்னிடம் பகிர்வதுண்டு.

அப்படிப்பகிர்ந்ததில்
ஒன்று இதோ..

கொல்லத்தில்
ஒரு முன்னணி
பெண்முகவர்.
நன்கு படித்தவர்.

அவரது கணவர்
வேலை ஒன்றும் இல்லாமல்
வீட்டில் சும்மாதான்
பொழுதைக் கழிந்து வந்தார்.

எல்ஐசி மூலம் மனைவி
சம்பாதிப்பதை அவர் நன்றாக
செலவழித்து வந்தார்.

ஒரு நாள் இத்தம்பதியர்
வசதியான NRI வாய்ப்பாளர்
ஒருவரைக் கண்டு பேச
திரு அலிக்குட்டி சாரை
உடன் அழைத்துக்கொண்டு
சென்றார்கள்.

பெரிய தொகைக்கான
வணிகத்திற்கு பேசி
ஒப்புதல் பெற்றார்கள்.

முகவருக்கு மகிழ்ச்சி.

வாய்ப்பாளர், அவரது மனைவி,
அவர்களது மகள் என்று அந்த
குடும்பமே பாசத்துடன்
பழகியிருக்கின்றனர்.

செக் வாங்கும் நிலைக்கு
வந்துவிட்டனர்.

அதற்குள்ளாக சிற்றுண்டி
விநியோகத்திற்கு வந்தது.

அந்த வேளையில்
நமது முகவரின்
கணவர் வாய்ப்பாளரிடம்
பொதுவான சில தகவல்களை
பரிமாறிக்கொண்டிருந்தார்.

அப்போது முகவரின் கணவர்
தனது கையின் முட்டியினை
மேஜையில் வைத்துக்கொண்டு
கையை உயர்த்தி வைத்தார்.

வாயப்பாளரையும் இவர்மாதிரியே
வைத்துக்கொள்ளும்படி
கேட்டுக்கொண்டார்.

பிறகு இருவரும் கையின்
பாதங்களை
பின்னிப்பிடித்துக்கொண்டு
பலத்தை பயன்படுத்தி மற்றவர்
கையைத்தணித்து
தரையில் பட வைக்கவேண்டும்
என்று ஒரு போட்டியை
அறிவிக்கிறார்.

விளையாட்டு வினையாக மாறும்
என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

போட்டி துவங்கியது.

முகவரின் கணவர் வாய்ப்பாளருக்கு
விட்டுக்கொடுத்திருக்கலாம்.

ஆனால் அவரோ தனது பலத்தை
பயன்படுத்தி வாய்ப்பாளரின் கையை
தரையில் சாய்த்துவிட்டார்.

வெற்றி பெற்ற மகிழ்ச்சியையும்
உரத்த குரலிலான  சிரிப்பு மூலம் வெளிப்படுத்தினார்.

அந்த வாய்ப்பாளர்
தான் தோற்றதை எளிதாக
எடுத்துக்கொள்ளவில்லை.

மனைவி, மகள், மற்றும்
வெளியார் முன்னிலையில்
தோற்றுப்போவதை யார்தான்
விரும்பி ஏற்றுக்கொள்வார்கள்.

பிறகென்ன..
சிற்றுண்டி முடிந்ததும்
இப்போது நிதிவசதி
போதுமான அளவு இல்லை என்றும்
பிறகு பார்த்துக்கொள்ளலாம்என்றும்
நயமாக பேசி அனைவரையும்
திருப்பி அனுப்பிவிட்டார்.

அலிக்குட்டிசார் அவர்கள்
முகவரது கணவரின் நடவடிக்கை
பற்றி என்னிடம் கூறி வருந்தினார்.

ஆமாம் ..
முட்டையிடும் கோழிக்குத்தானே
வலி புரியும்.

உட்கார்ந்து சாப்பிட்டே
அழிப்பவர்களுக்கு என்ன புரியும்?

நமது முகவர்கள்
வாய்ப்பாளர்களைப்பார்க்கும் போது
ஒருபோதும் அவர்களை விட
நாம் மேலானவர்கள்
என்று நிரூபிக்க
முயற்சிக்கக்கூடாது.

நாம் போயிருப்பது வணிகம்
வாங்கத்தானேயன்றி நமது
புஜ பல பராக்கிரமங்களை
பறைசாற்ற அல்ல என்பதை
புரிந்து கொள்ளவேண்டும்.

தேவையற்ற பேச்சுக்களை
தேவையற்ற கருத்துக்களை
தேவையற்ற விவாதங்களையும்
கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

அப்படியே விவாதங்கள் வந்தாலும்
தோற்றுப்போவதுபோல் நடித்து
அவர்களது இதயங்களைத்தொட்டு
வெற்றி வாகை சூடவேண்டும்.

நான் சொல்வது சரிதானா
முகவர் நண்பர்களே!!

Friday, 30 March 2018

கண்ணியம்..ஒழுக்கம்

நான் 1990-92ல்
கேரள மாநிலம்
திருவல்லாகிளையில்
உதவிக்கிளை மேலாளர்.

போற்றுதலுக்குரிய
திரு ஜோசப் சாக்கோ சார்
முது நிலைக்கிளை மேலாளர்.

எல்லோரிடமும் பாசமாக
இருப்பார்கள்.
விற்பனைக்கலையில்
ஒரு வித்தகர்.

அவரது  சிறந்த ஆலோசனை
ஒன்று இன்றுவரை என் மனதில்
ஆழமாகப்பதிந்துள்ளது.

பொதுவாக எல்லோருமே
நமது வீடுகளில்
சிலநண்பர்களை
தெருக்கோடியிலேய
பேசி அனுப்பி விடுவோம்.

இன்னும் சில நண்பர்களை
வாசலில் வைத்தே பேசி
அனுப்பிவிடுவோம்.

வேறு சில நண்பர்களை
வரவேற்பு அறை வரை மட்டுமே
வர அனுமதிப்போம்.

ஒரு சிலரை மட்டும் வீடு
முழுவதும் சுற்றிவர
அனுமதிப்போம்.

அந்த ஒரு சிலர் தான்
குடும்பத்தாரின்
முழு நம்பிக்கையைப்
பெற்றவர்கள்.

குடும்பத்தில் ஒருவராகவே
மதிக்கப்படுபவர்கள்.

வீடு முழுவதும் வர
அனுமதிக்கப்படும்
அந்த ஒருசிலரில் ஒருவராக
நமது முகவரை ஒவ்வொரு
வாய்ப்பாளரும் கருதவேண்டும்.

இப்படிப்பட்ட
அங்கீகாரத்திற்காக
ஒவ்வொரு முகவரும்
ஒழுக்கத்திலும் நாணயத்திலும்
தங்களை தகுதிபடுத்திக்
கொள்ளவேண்டும்.

இதுவே நமது துறையில்
கடைப்பிடிக்கவேண்டிய
கட்டாய ஒழுங்குமுறை
என்பார்.

அவர் சொல்வது முற்றிலும்
சரி என்பதே என் கருத்தும்.

நாங்க மட்டும் என்னவாம். பிசி தான்

பொதுவாக நாம் அனைவருமே
ஒரு வாய்ப்பாளரைக் காணச்
செல்லவேண்டும் என்றால்
அவர் எப்போது
சாவகாசமாக இருப்பார் என்று
அறிந்துகொண்டு
அந்த வேளையில்தான்
அவரைக்காணச்  செல்வோம்.

ஆனால் திருவல்லாகிளையில்
முதுநிலைக்கிளை மேலாளராக இருந்த
திரு ஜோசப் சாக்கோ சார் அவர்கள்
அப்படியெல்லாம் கால நேரம்
பார்ப்பதில்லை.

வாயப்பாளர் எந்த மன நிலையில்
இருந்தாலும் அவரைச்சந்தித்து
வணிகத்தை முழுமையாக்குவதில்
மன்னாதி மன்னர்.

உதவிக்கிளை மேலாளராக
1990 ஜூலையில் அவரோடு
புதிதாக இணைந்தேன்.

முதல் ஒரு மாத காலம்
என்னை தன்னுடன்
அழைத்துச்சென்று
வணிக நுட்பங்களை
தெரிந்து கொள்ள வைத்தார்.

ஒரு நாள் முகவரொருவர்
ஒரு பெரிய வாய்ப்பாளரிடம்
வணிகத்தை  பேசிமுடித்து
விட்டதாகவும் காசோலை
வாங்குவதில் தான் தாமதமாகிறது
என்றும் எங்களிடம் வந்து
வருத்தத்துடன் கூறினார்.

அன்று மாதக்கடைசி.
கிளைக்கு வணிகப் பற்றாக்குறை.

இதைக் கேட்ட உடன்
நாங்களிருவரும்
முகவருடன் வாய்ப்பாளரைச்
சந்திக்க சென்றோம்.

அந்த வாய்ப்பாளர் ஒரு
கட்டிடக்கலை வல்லுநர்.

எப்போதும் அவசரகதியில்
வேகமாக இயங்குபவர்.

அங்கும் இங்கும் ஓய்வின்றி
எப்போதுமே ஓடிக்கொண்டு
இருப்பவர்.

நாங்கள் சென்றதும் அவர்
எங்களைப்பார்த்து
"நான் இப்போது மிகவும் பிசி.

முக்கியமான வேலைக்காக
வெளியே போகிறேன்.

இன்னொரு நாள்
ஓய்வாக இருக்கும்போது
நீங்கள்  வரலாம்"
என்று கேட்டுக்கொண்டார்.

வெளியே கிளம்பவும்
தயாரானார்.

அப்போது
திரு சாக்கோ சார்
அவரைப்பார்த்து
"நாங்கள் உங்களை விட
கூடுதல் பிசி..

எங்களுக்கும் இன்று
மாதக்கடைசி.

வேறு வேலைகள்
நிறைய இருக்கின்றன.

நீங்கள் ஏற்கனவே அனைத்து
ஆவணங்களையும் தந்து விட்டீர்கள்.

பணம் மட்டுமே பாக்கி.

எனவே செக்கில்
கையெழுத்துமட்டும்
போட்டுக் கொடுங்கள்.

மற்றவற்றை நாங்களே
எழுதிக் கொள்கிறோம்"
என்று கூறினார்.

வாய்ப்பாளரும் எங்களிடம்
பேசிக்கொண்டே இருந்தால்
அவரது வேலை சுணங்கும்
என்று நினைத்தார்.

எனவே உடனே
கையெழுத்துப்போட்டு
காசோலையை
எங்களிடம்  கொடுத்துவிட்டு
தனது பணியைக்கவனிக்க
பறந்து விட்டார்.

சில நேரங்களில்  வாய்ப்பாளர்
பிசியாக இருப்பதும் நமக்கு
நல்லதுதான் போலும்.

Wednesday, 28 March 2018

நினைப்பதை அறிதல்


ஷேக் முஹம்மது
பின் ரஷீத் அல் மக்தூம்
துபாய் அமீரகத்தின்
இன்றைய மன்னர்.

இவரே ஐக்கிய அரபு அமீரகங்களின்
துணைத்தலைவராகவும் உள்ளார்.

பல வருடங்களுக்கு முன்
துபாய் மாநகரத்தில்
உலக அளவில் உயரமான
கட்டிடம் ஒன்றைக்கட்டிமுடித்து
உலக வரைபடத்தில் துபாய்க்கு
ஒரு உன்னத இடத்தைப்பெற்றுத்தர
பேராசைப்படுகிறார் மன்னர்.

இந்த எண்ணத்தை
தனது தொழில்நுட்பப் பிரிவு
வல்லுனர்களிடம் தெரிவிக்கிறார்.

தொழில் நுட்ப அணியினர்
எண்பது மாடிகள் கொண்ட
ஒரு ஊசிக்கோபுரம்,
அதைச்சுற்றி சிறிய கட்டிடங்கள்,
கவின் மிகு பூங்கா,
பசுமை நிறைந்த புல்வெளிகள்
இவற்றை உள்ளடக்கிய
வரை படத்தை மன்னரின்
பார்வைக்கு வைக்கிறார்கள்.

மன்னர் பார்த்துவிட்டு
கருத்தேதும் கூறாமல்
வரைபடத்தை திருப்பிக்
கொடுத்து விடுகிறார்.

கொடுகப்பட்ட வரைபடத்தை
மன்னர் ரசிக்கவில்லை
என்பதை வல்லுனர் குழு
நன்றாகவே புரிந்து கொள்கிறது.

ஒரு மாத இடைவெளிக்குப்பிறகு
பல மாற்றங்களுடன்
வேறு ஒரு வரைபடத்தை மன்னரின்
பார்வைக்கு வைக்கிறார்கள்.

இதுவும் சிறந்ததல்ல என
மன்னர் நினைக்கிறார்.

பிறகு மன்னர் அவர்களே
வல்லுனர் குழுவிடம்,
“இந்த இடத்தில் இது வரை
மனிதகுலம் கட்டியிருக்காத
மிக உயரமான மிகச்சிறந்த
கட்டிடமாக  அமைக்க வேண்டும்.

அதனைச்சுற்றி மிகச்சிறந்த
சோலையும் நீரூற்றும்
அமைக்கப்படவேண்டும்.

மிகப்பெரிய விடுதிகளும்
மிகச்சிறந்த வணிக வளாகமும
இருத்தல் வேண்டும்.

மொத்தத்தில்  மனித இனம்
இதுவரை பார்த்திராத
குடியிருப்பாகவும் அந்த இடம் இருக்கவேண்டும்.

இதன் அடிப்படையில்
திட்டம் தீட்டுங்கள்"
என்று அழுத்தமாகக்கூறுகிறார்.

இந்த செய்தியை  படித்தபோது
எனது உயர் அலுவலர் ஒருவர்
என் நினைவில் வந்து போனார்.

1998-2002 ல் நான்
தஞ்சைக்கோட்டத்தின்
கணிணித்துறை மேலாளர்.

திரு மணிவண்ணன் சார் அவர்கள்
1998-2000 காலத்தில்
தஞ்சைக் கோட்ட மேலாளர்.

எனது துறை சார்ந்த
சில அலுவலகக் குறிப்புகளை
அவரது ஒப்புதலுக்காக
அனுப்பி வைப்பதுண்டு.

அவ்வாறு அனுப்பப்படும்
குறிப்புகள் பல நேரங்களில்
ஒப்புதல் இல்லாமலும்
குறிப்பேதுமில்லாமலும்
எனக்கே திரும்பி வரும்.

அந்த குறிப்புகள்
முழுமை பெற வில்லை
என்பதை புரிந்து கொண்டு
மாற்றி எழுதி அனுப்பவேண்டும்.

நேரில் சென்றாலும் குறிப்பு
சரியில்லை என்பதை
தனது உடல் மொழி மூலம்
தெரியப்படுத்துவார் .

கடுஞ்சொற்களையும்
பயன்படுத்தமாட்டார்.
கட்டளையும் இடமாட்டார்.

அவரது எதிர்பார்ப்பு
என்னவென்று  நம்மிடம்
நேரடியாகக்கூறாமல்
நாமே அதனை புரிந்து கொண்டு
நம்மை சரியாக செயல்பட வைப்பது
அவரது தனித்துவ பாணி.

அவர் உடல்மொழி மூலம்
தெரிவிக்காமல் நேரடியாக அவரது
கருத்தைச் சொல்லியிருக்கலாம்.

அதற்கேற்றபடி நான் குறிப்பை
மாற்றி எழுதியிருப்பேன்.

அப்படிச் செய்திருந்தால்
என்னுடைய  சிந்தனைத்திறன்
மழுங்கிப் போயிருக்கும்.

என்னுடைய சிந்தனையும்
செயல்கள்களும்
மேம்பட்டிருக்காது.

துபாய் மன்னரிடமும்
மணிவண்ணன் சாரிடமும்
இந்த மிகச் சிறந்த
மேலாண்மைக்குணத்தை
உணர்ந்து மகிழ்கிறேன்.

இவை நாம் அனைவருமே
கற்றுக்கொள்ள வேண்டிய
நல்ல படிப்பினைகள்.

Tuesday, 27 March 2018

உயரவும் வேண்டும். உயர்த்தவும் வேண்டும்.

தமிழ் நாட்டிலிலுள்ள
ஒரு தென்மாவட்டம்.

இங்குள்ள ஒரு குறிப்பிட்ட
சமுதாய மக்கள்
வணிகத்தில் ஈடுபட்டு
தொடர் வெற்றி பெற்று
வலம் வருபவர்கள்.

தமிழ்நாடு முழுவதிலும்
இவர்களது கடைகள் உண்டு.
குறிப்பாக மளிகைக்கடைகள்.

இவர்களது கடைகளில்
வேலைபார்ப்பவர்கள்
அநேகமாக அவர்களது
உறவினர்களாகத்தான்
இருப்பார்கள்.

ஒரு ஊழியர்
குறிப்பிட்ட கடையில்
வேலைபார்த்துவிட்டு
வேறொரு கடையில் போய்
அதே வேலையில் சேர்வது
என்பது அறவே கிடையாது.

இருக்கும் கடையை
விட்டுவிட்டு சென்றால்
இன்னொரு கடைக்கு
முதலாளியாகத்தான்
செல்வாரே தவிர
ஊழியராகவே வேறு கடைக்கு
ஒரு போதும் செல்லமாட்டார்.

தனியாக கடை போடுவதற்காக
கடையை விட்டு விலகும்போது
தற்போதைய கடை உரிமையாளரே
அந்த ஊழியரை மனதார வாழ்த்தி வழியனுப்பிவைப்பார்.

வேலையாள் தனக்கு வந்துள்ள
ஒரு போட்டியாளர் என்று
கடை உரிமையாளர்
ஒருபோதும் நினைப்பதில்லை.

சில வேளைகளில்
நிதி உதவி கூட செய்வதுண்டு.

சில வேளைகளில்
பன்னிரண்டு மாதங்களுக்கான
குலுக்கல் முறை சீட்டு
ஒன்றை நடத்தச்சொல்வார்கள்.

இரண்டாவது தவணை
சீட்டு நடத்துபவருக்கு
என்ற அடிப்படையில்
அந்த பணம் அவருக்கு
வட்டியின்றி கிடைக்கும்.

அந்த பணத்தை
முதலீடாக  வைத்து கடையை
சிறப்பாக நடத்த
ஆலோசனை கூறுவார்கள்.

அவர்களும் சீட்டுக்கு
சந்தாதாரராகி
தங்களின் நண்பர்களையும்
சந்தாதாரராக்கி
சீட்டினை வெற்றிகரமாக
நடத்திட உதவுவார்கள்.

தனது கடையில் வேலைபார்த்த
ஊழியர் தனது கண் முன்னால்
வளர்ந்து உயர்வதை கண்ணாரக்
கண்டு மகிழ்வார்கள்.

புதிய கடைவைத்து
நன்கு வளரவேண்டும்
என்ற ஆசை வைத்த
ஊழியரின் உயர்ந்த நோக்கம்
பாராட்டுக்குரியது.

கடை உரிமையாளரின்
உதவியாளரை வாழ்த்தும்
பண்பு பாராட்டுக்கும்
போற்றுதலுக்கும் உரியது.

சில தையற்கலைஞர்களும்
தங்களது ஊழியர்கள்
தனிக்கடை போடும்போது
வாழ்த்தி மகிழ்ந்ததை
கண்கூடாக பார்த்திருக்கிறேன்.

இஞ்ச் டேப் ஒன்றையும்
கத்தரிக்கோல்ல் ஒன்றையும்
பரிசாக வழங்குவதை
நான் கண்டிருக்கிறேன்.

நமது அலுவலகத்திலும்
இந்த மாதிரி  முகவர்களை
உயர்த்தி மகிழும்
வளர்ச்சி அலுவலர்கள்
பலர் உண்டு.

பல வளர்ச்சி அலுவலர்கள்
தங்களது முகவர்களை
நன்றாக வளர்த்து
வளர்ச்சியதிகாரிகளாக
உயர்த்தி ப்பார்த்து
மகிழ்ந்திருக்கின்றனர்.

பரமத்தி வேலூரில்
வெற்றிகரமாக பணியாற்றிய
வளர்ச்சி அலுவலர்
திரு லோகநாதன் அண்ணாச்சி.

அவரது அணியைச்சேர்ந்த
ஏழெட்டு முகவர்களை
வளர்ச்சி அலுவலராக உயர்த்தி
அழகுபார்த்து மகிழ்ந்தவர்.

இவரது அணியைச்சேர்ந்த
திரு சங்கர் அவர்கள் இன்று
கோவைக்கோட்டத்தில்
கோட்ட மேலாளர் நிலையில்
ஒரு முதன்மை மேலாளர்.

தஞ்சையில்
வளர்ச்சிஅலுவலராக இருந்தவர்
திரு சங்கரமூர்த்தி அண்ணாச்சி.

இவரது அணியிலிருந்தும்
ஐந்தாறு முகவர்கள்
வளர்ச்சி அலுவலர்களாக
உயர்ந்து சாதித்திருக்கின்றனர்.

இதைப்பார்த்து ரசித்து
மகிழ்ந்தவர் தான் அண்ணாச்சி.

திருநெல்வேலி கிளையின்
வளர்ச்சி அலுவலராக இருப்பவர்
திரு ஜாண்சன் ஜீவதாஸ்.

இவரது புகழ் அணியில்
திரு செல்வின்பால்ராஜ்
என்ற ஒரு முகவர்.

அவர் 1992 ல்
வளர்ச்சி அலுவலராக உயர்ந்து
தற்போது தன்னுடைய
வளர்ச்சி அலுவலரையும்
வணிகத்தில் முந்தி
நெல்லைக்கோட்டத்தின்
முன்னணி வளர்ச்சி அலுவலராக
கொடி கட்டி பறக்கிறார்.

திரு செல்வின் அவர்களின்
வெற்றியை தனது வெற்றியாக
நினைத்து மகிழ்கிறார்
திரு ஜாண்சன் அவர்கள்.

வளர்ச்சி அலுவலர் தேர்வு
சட்டதிட்டங்கள் இப்போது
மாற்றப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்களால்
வளர்ச்சி அலுவலர்களுக்கு
தங்களது முகவர்களை
வளர்ச்சி அலுவலர்களாக
உயர்த்த முடியாத நிலைமை.

தான் உயர்வதும் 
தன்னுடனிருப்பவர்களை
உயர்த்துவதும்
போற்றுதலுக்குரியவை.

தன்னால் வளர்க்கப்பட்டவர்கள்
உழைத்து உயர்வதை
பார்த்து மகிழ்வது
உண்மையிலேயே
பெருமிதம் தான்.
பெரிய பேரானந்தம்தான்.

Sunday, 25 March 2018

அளந்து கொடுங்க

1993 களில்
நெல்லை மாவட்டம்
ராதாபுரம்  அருகில்
ஒரு கோவிலில்
மதிப்பு மிக்க சிலை ஒன்று
திருட்டு போனது.

திருட்டு போன இடத்தில்
நமது முகவர் ஒருவருடைய
விசிட்டிங்கார்டு தரையில்
கிடந்திருக்கிறது.

அதை காவல் துறையினர்o
கைப்பற்றி விசாரணையைத்
துவக்குகின்றனர்.

அவர் எல்ஐசி முகவர் என்று
தெரிந்து கொள்கின்றனர்.

காவல் துறையினர்
நமது முகவரை
கடுமையாக விசாரித்தனர்.

முகவர் தனக்கு ஒன்றும்
தெரியாது என்று சொன்னதை
காவல்துறை நம்பவில்லை.

வீட்டை எல்லாம்
சோதனை போடுகிறார்கள்.

எல்ஐசி அலுவலகம் வந்து
அவரது வாடிக்கையாளர்களின்
முழு முகவரியையும்
அவரைப்பற்றிய விபரங்களையும்
குறித்துக்கொள்கின்றனர்.

திருச்செந்தூர்
கிளைப்பகுதிகளான
உடன்குடி சாத்தான்குளம்
போன்ற ஊர்களில்
தங்கநகைப்பட்டறைகள்
நிறைய இருக்கின்றன.

அந்தக்காலங்களில்
சில குறிப்பிட்ட வகை நகைகள்
இந்த ஊர்களில் செய்யப்பட்டு
பிற நகரங்களுக்கு விற்பனைக்கு
அனுப்பிவைக்கப்படும்.

முகவரின் கெட்ட நேரம்
அவரது வாடிக்கையாளர்களில்
கூடுதல் நபர்கள் தங்க நகை
தயாரிக்கும் தொழிலாளர்கள்.

ஒருவர் மும்பையில்
நகைக்கடை வைத்துள்ள
ஒரு சிறு வியாபாரி.

இதனால் காவலர்களுக்கு
நமது முகவர்மீதான
சந்தேகம் வலுக்கிறது.

அவரது வாடிக்கையாளர்கள்
விசாரணை வளையத்திற்குள்
கொண்டு வரப்படுகிறார்கள்.

முகவரின் வீட்டை காவலர்கள்
சோதனையிடும்போது
மாதக்கடைசிநாட்களில்
நான் மொட்டையாக
இரண்டு லட்சம் ஐந்து லட்சம்
கண்டிப்பாக கொண்டுவரவும்
என்று கொடுத்திருந்த
தந்தி அட்டைகள் அவர்களுக்கு
கிடைக்கவில்லை.

அவை மட்டும் கிடைத்திருந்தால்
என்னையும் விசாரணை
வளையத்திற்குள் கொண்டு
வந்திருப்பார்கள் .

நமது முகவருக்கு
திருட்டில் தொடர்பு இருக்கும்
என்று மிகவும் உறுதியாக
காவல் துறையினர்
சந்தேகப்பட்டனர்.

பல நாட்கள் துன்புறுத்தி
விசாரிக்கிறார்கள்.

எந்த வொரு வழக்கும்
பதிவு செய்யவில்லை.

அவர்களுக்கும் வேறு தடயம்
ஏதும் கிடைக்கவில்லை.

ஆட் கொணர்வு மனுஒன்றினை
நீதிமன்றத்தில் தாக்கல் செய்து
குடும்பத்தினர் முகவரை வெளியே
கொண்டுவருகிறார்கள்.

இந்த நேரத்தில்
வேறு ஒரு வழக்கில் சிக்கிய
திருடன் ஒருவன்
காவல்துறை விசாரணையில்
ராதாபுரம் கோவிலில்
சிலை திருடியது அவன்தான்
என்று ஒப்புதல் வாக்குமூலம்
கொடுக்கிறான்.

எப்படி துருடன் கையில்
முகவரின் விசிட்டிங்கார்டு
கிடைத்தது என்றும்
அதை ஏன் கோவிலில்
விட்டுச்சென்றான் என்றும்
காவல்துறையினர் தீவிரமாக
விசாரிக்கிறார்கள்.

கோவிலில் சிலை
திருடுவதற்காகச் சென்றவன்
பூட்டியிருந்த வீடு ஒன்றின்
பூட்டை உடைத்து
திறந்து சென்றவன்
அந்தவீட்டினுள்
மிகவும் பாதுகாப்பாக
பகல் வேளையில்
தங்கியிருக்கிறான்.

இரவு தான் கோவிலுக்குள்
நுழைந்திருக்கிறான்.

அந்த வீடு நம் முகவரது
உறவினரின் வீடு.

அந்த உறவினர் முகவருக்கு
மைத்துனர் முறை வேண்டும்.

அந்த மைத்துனர்
நமது முகவரின் வீட்டிற்கு
முன்பு எப்போதோ
ஒரு வேலையாக வந்திருக்கிறார்.

அப்படி வந்த வேளையில்
அத்தானின் விசிட்டிங்கார்டை
பெருமையாக நினைத்து
வாங்கிக்கொண்டு
சென்றிருக்கிறார்.

அந்த கார்டை வீட்டில்
பத்திரமாக பாதுகாத்து
வைத்திருந்திருக்கிறார்.

இந்த விசிட்டிங் கார்டைத்தான்
வீட்டில் பதுங்கியிருந்தபோது
அந்த சிலைத்திருடன் பார்த்து
எடுத்திருக்கிறான்.

காவலர்களைக்குழப்பி
வழக்கை திசைதிருப்பவே
முகவரின் விசிட்டிங்கார்டை
கோவிலில் விட்டுச்சென்றதாக
ஒப்புக்கொண்டிருக்கிறான்.

இவன் சிக்கிய பிறகுதான்
நம் முகவரால்  இந்த பெரிய
சிக்கலிலிருந்து விடுபட்டு
வெளியே வர முடிந்தது.

அதற்குப்பிறகு தான்
முகவருக்கு முழு நிம்மதி.

முகவர்களே!!
நமது விசிட்டிங்கார்டுகள்
மிகவும் மதிப்புமிக்கவை.

அவற்றை விளம்பர நோட்டீஸ்
போல் தாறுமாறாக
விநியோகிக்கக்கூடாது.

நன்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே
அதனை கொடுக்கவேண்டும்.

அளந்து அளவாகக் கொடுத்தால்
இப்படிப்பட்ட சிக்கல்களில்
எதிலும் சிக்காமல்
நிம்மதியாக இருக்கமுடியும்.