Sunday, 8 September 2019

அந்த நாள் ஞாபகம்.....


அந்த நாள் ஞாபகம்.....

பாளையங்கோட்டை தூய சவேரியார் உயர்நிலைப்பள்ளியில், 1964 முதல் 1970 வரை "A" பிரிவில் SSLC முடிய என்னுடன் படித்த மாணவர்களுக்கு 2019-20ம் ஆண்டு பொன்விழா ஆண்டு ஆகும். அந்த பிரிவின் மாணவர்கள் நாங்கள் எங்கள் நினைவுகளை போற்றும் வண்ணம் இன்று நாங்கள் படித்த பள்ளியிலேயே ஒன்று கூடினோம்.  பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட் தந்தை அகஸ்டின் ஜான் பீட்டர் அடிகளார் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார்கள். இந்த கூட்டத்திற்கு எங்களுக்கு ஆசிரியர்களாக இருந்து வழியும் ஒளியும் காட்டிய திரு பீட்டர் ஃபிடெலிஸ் அவர்களும், திரு தனம் அவர்களும் வந்திருந்து எங்களை வாழ்த்தியும் ஆசி வழங்கியும் பேசினார்கள்.
வந்திருந்தோரை எங்களில் ஒருவரும், நெல்லை ம. தி .தா. இந்துக்கல்லூரியின் மேனாள் முதல்வருமான முனைவர் நமச்சிவாயம் அவர்கள் வரவேற்றுப் பேசினார்கள். நாங்கள் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி எங்களுக்கு ஆறுமுதல் எட்டாம் வகுப்புவரை வகுப்பு ஆசிரியராக இருந்து வழி நடத்திய திரு சுப்ரமணிய ஐயர் அவர்களின் நினைவாக ஏழை மாணவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறோம். ஆறாம் வகுப்பு மாணவர்கள் ஐந்து பேருக்கு, ஏழாம் வகுப்பு மாணவர்கள் ஐந்து பேருக்கு, எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஆறு பேருக்கு, என்று கல்வி உதவித் தொகை கடந்த வாரம் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் வழங்கப்பட்டன.
பயன் பெற்ற மாணவர்களும் வந்திருந்து, தங்களின் நன்றி உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்கள்.
பள்ளியின் பழைய மாணவர்கள் சங்க பொறுப்பாளர்கள் திரு பரமசிவனும், திரு பால் கதிரவன் அவர்களும், எங்களது இந்த முயற்சிகளைப் பாராட்டி, வாழ்த்திப் பேசினார்கள்.
ஆசிரியர் திரு சுப்ரமணிய ஐயர் அவர்களின் புதல்வர் திரு கல்யாணி அவர்களும், பேரன்மாரும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
கலந்துகொண்ட நாங்கள் ஆசிரியர்களுக்கும், கல்வி நிறுவனத்திற்கும் மிகவும் கடமைப்பட்டவர்கள் என்ற கருத்தை ஆழமாக எடுத்துரைத்தோம்.
விஜயன் அருள் ஜெபராஜ் என்ற ஒய்வு பெற்ற மின்வாரிய பொறியாளர், தனது நேர்மைக்கும், உண்மையான உழைப்பிற்கும், மொழி ஆளுமைக்கும், தூய சவேரியார் பள்ளியும் ஆசிரியர்களும் தான் முழு முதற் காரணம் என்று தெரிவித்தார்.
எங்களின் அனைத்து கூட்டங்களையும் திறம்பட நடத்தி வரும் திரு குமாரை அனைவரும் பாராட்டிப் பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எங்களில் மூவர்களின் இல்லத்தரசிகளான திருமதி கோமதி நமச்சிவாயம், திருமதி பாக்கியலட்சுமி இசக்கிராஜன், திருமதி மஹாலக்ஷ்மி நாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நான், குமார், நமசிவாயம், ரூபன், பால்ராஜ், விஜயன் அருள், வேணுகோபால்,ரங்கன், ராமசுப்ரமணியன், ஜாண், திருமூலநாதன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தோம்.
மாணவர்கள் நாங்கள்,  கடந்து வந்த பாதை பற்றியும், பெற்ற அனுபவங்கள் பற்றியும்  விரிவாகப் பேசினேன்.
திரு குமார் அவர்கள் நன்றி கூறினார்.

-பாளை ப.இசக்கிராஜன் 

இனிய உளவாக



இனிய உளவாக 

1950, 60 களில் நம் நாட்டில் படிப்பதற்கு வசதி மிகக் குறைவு. அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் கல்வி நிலையங்கள் இருந்தன. கிடைத்த வாய்ப்புக்களை வசதி படைத்தோர் முழுமையாக பயன் படுத்திக் கொண்டனர். கற்றறிந்து வாழ்க்கையில் ஒளிர் விட்டார்கள். ஆங்கில மொழி மீது அவர்களுக்கு பெரிய மோகம் இருந்தது.
திரை அரங்குகள் புதிதாக முளைக்கத் தொடங்கின. போக்குவரத்துக்கான வழித் தடங்கள் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு பேருந்துகள் இறக்கி விடப்பட்டன. படித்த பெரிய இடத்து நபர்கள் இவ்வகைத் தொழிலில் இறங்கி புதிது புதிதாக பல நிறுவனங்களைத் தொடங்கினார்கள்.
அந்த நிறுவனங்களுக்கு நமது வழக்கப்படி பெயர் வைப்பதற்கு முன்னுதாரம் இல்லை. எனவே மேலை நாடுகளில் பெயர் வைக்கும் முறையின் அடிப்படையில் பெயர்களை வைக்கத் தொடங்கினார்கள். அப்போது இருந்த பேருந்து நிறுவனங்களின் சில ஆங்கிலப் பெயர்கள் ரசிக்கும்படி இருந்தன.
பஸ் போக்குவரத்தை முதலில் தொடங்கிய முன்னோடிகள் நாங்கள் தான், என்பதைக் குறிக்கும்படி நாகர்கோவிலில் "Pioneer Bus Service" என்று தொடங்கினார்கள். இது போல் நெல்லையில் Southern Roadways என்ற பெயரிலும், Lion Bus Services என்ற பெயரிலும், Whales என்ற பெயரிலும், தொடங்கினார்கள்.
சிலர் உள்ளூர் பெயரையும் ஆங்கில வார்த்தைகளுடன் சேர்த்து வைத்தார்கள். இப்படித்தான் Sri Ram Popular Service என்ற பெயரில் , ஒரு நிறுவனம் தோன்றியது.
திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று சேலத்தில் தொடங்கப்பட்டபோது, அதற்கு Modern Theatres என்ற ஆங்கிலப் பெயரைத் தான் சூட்டினார்கள். National Pictures, Jupiter Films, என்பது தயாரிப்பு நிறுவனங்கள்.
திரை அரங்குகளுக்குக் கூட ஆங்கிலத்தில் தான் பெயர் வைக்கப்பட்டன. நெல்லை நகரத்தில், Palace-de-wales, Royal, Popular, Central, என்று சில அரங்குகள். பிற நகரங்களில் Coronation , Thai cinies, Pioneer, Regal , Rainbow, Gaiety, Crown,Wellington, Broadway, Plaza, National, Odeon, Woodlands, என்றும் ஆங்கிலத்தில் பெயர் சூட்டி திரை அரங்குகளைக் கட்டினார்கள்.
காலப்போக்கில் தமிழ்ப் பெயர்களுக்கு மாறி வந்தாலும், காலச்சுழற்சியில் திரையரங்குகளுக்கு இப்போது  மீண்டும் ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் முறை வந்து கொண்டு இருக்கின்றன.
அப்போதெல்லாம் அடுக்ககங்கள் என்பது கிடையாது. எல்லாம் தனித் தனி வீடுகள் அல்லது வளவு வீடுகள் தான். வளவு வீடுகள் உரிமையாளர்களின் பெயரிலேயே அழைக்கப்பட்டன. அரண்மனை போன்ற பெரிய பெரிய வீடுகளும் கட்டினார்கள்.
என் வகுப்புத் தோழன் எட்டயபுரத்து வாரிசு திரு விஜயன் அவர்களின் அரண்மனை நெல்லை வீரராகவ புரத்தில் இருக்கிறது. அந்த மாளிகைக்கு Castle Wood என்று பெயர். படிக்கின்ற காலத்தில் அந்தப் பெயர்களுக்குண்டான காரணங்களும், பொருளும் தெரிய வில்லை. சிறிது வளர்ந்த பிறகு தான் அதன் உட் பொருளை எல்லாம் உணர முடிந்தது.
இப்போதும் கூட ஆங்கிலம் மீதுள்ள மோகத்தினால் மக்கள் அடுக்ககங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார்கள். சிலர் ஆங்கிலத்தில் இருந்தால் தான்  பெருமை என்று நினைத்து பொருத்தமில்லாத பெயர்களைக் கூட வைக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் Enclave, Plaza , Avenue, Nest என்றெல்லாம் பெயரிடுகிறார்கள். Cozy Nest என்பதற்கு வசதியான ஒரு உறைவிடம் என்று பொருள். இந்த பெயர் பொருத்தமானதாக தோன்றுகிறது. பக்கத்தில் சுற்றி இருப்பவர்களைக் காட்டிலும் மாறு பட்டவர்கள் இருக்கும் ஒரு இடம் தான் Enclave எனப்படும். எந்த வகையில் அந்த அடுக்ககத்தில் வசிப்பவர்கள்  மாறுபட்டவர்கள் என்று தான் சொல்லத் தெரியவில்லை.
Plaza என்பதற்கு அங்காடி, அல்லது சந்தை நடக்கக்கூடிய நகரத்தின் திறந்த வெளிப் பகுதி என்று பொருள் கூறுகிறார்கள்.. அடுக்ககத்துக்கு இந்தப் பெயர் எப்படி பொருந்துகிறது என்று தெரியவில்லை. இப்படிப் பல பொருந்தாப் பெயர்களை அடுக்ககத்திற்கு சூட்டியுள்ளனர். நிழற் சாலை என பொருள்படும் Avenue என்ற ஆங்கிலச்சொல், ஓர் அடுக்ககத்திறகு எப்படி பொருந்துகிறது என்று தான் தெரிய வில்லை.
சிறு குழந்தைகளுக்கு இப்போது சூட்டப்படும் பெயர்களில் கூட வடமொழி கலக்கப்பட்டு , ஒரு முறைக்கு பலமுறை கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு தான் அந்த குழந்தைச் செல்வங்களின் பெயரை உச்சரிக்கவே முடிகிறது.
இனிய உளவாக இன்னாத கூறல் என்ற குறள் தான் மனதில் வந்து போகிறது.
- பாளை ப.இசக்கிராஜன்.

பள்ளியில் சீருடை



பள்ளியில் சீருடை 

நான் 1964ல் ஆறாம் வகுப்பு படிக்கும்போது தான் சீருடை அணிவது பற்றி தெரிந்து கொண்டேன். அப்போது அனைத்துப் பள்ளிகளிலும் மேல் சட்டை வெள்ளை நிறத்தில் மட்டும் தான் இருக்கும். அரைக்கால் டவுசர் நிறம் மட்டும் பள்ளிக்கு பள்ளி மாறுபடும்.
எங்களது தூய சவேரியார் பள்ளியில் அரைக்கால் டவுசர் "நேவி ப்ளூ" நிறம். பக்கத்தில் இருந்த தூய யோவான் பள்ளியில் "காக்கி" நிறத்தில் டவுசர். கதீட்ரல் பள்ளியில் செங்கல் நிறம் போன்ற ஒரு "சிகப்பு" நிறம்.
எங்கள் வகுப்பில் எட்டயபுரத்து ஜமீன் குடும்பத்து இளவரசு வெங்கட விஜயன் ஒரு மாணவன். பெரு நிலக்கிழார் திரு அம்மையப்ப முதலியார் அவர்களின் புதல்வன் நமச்சிவாயம் ஒரு மாணவன். வண்ணாரப் பேட்டை பண்ணையார் குடும்பத்து கிருஷ்ண சீனிவாசன் ஒரு மாணவன்.
ACA சிட் பண்டு நிறுவன உரிமையாளர் திரு ராமசாமி அவர்களின் புதல்வன் சீனிவாசன் ஒரு மாணவன். அஞ்சல் அலுவலகத்தில் வேலைபார்த்து வந்த ஊழியர் திரு குமார் அவர்களின் புதல்வன் திரு பால்ராஜ் ஒரு மாணவன். காவல்துறை ஆய்வாளர் ஒருவரின் புதல்வன் திரு குமார் என்ற மாணவன். கோவில் பட்டி மீனாட்சி மேட்ச் பேக்டரி குடும்பத்து ராஜசேகர் ஒரு மாணவன். 
விருதுநகர் திரு ராதாகிருஷ்ணன் என்ற மருத்துவர் அவர்களின் புதல்வன் ரவீந்திரன் ஒரு மாணவன். லயோலா கான்வெண்ட் ஆசிரியை திருமதி பாமா டீச்சரின் புதல்வன் சங்கரலிங்கம் ஒரு மாணவன். திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு G.R.எட்மண்ட் அவர்களின் மைத்துனர் ரூபன் ஒரு மாணவன்.நெல்லை மாவட்டத்து ஆட்சித் தலைவர் திரு MAK தயாப் அவர்களின் தம்பி ஒரு மாணவன்.
மாவட்ட நீதியரசரின் புதல்வன் சீனிவாசன் ஒரு மாணவன். இவர்களோடு பாளை காந்தி மார்க்கெட் ஏழை கணக்கப் பிள்ளை பலவேசம் பிள்ளையின் புதல்வன் இசக்கிராஜன் என்ற நானும் ஒரு மாணவன்.
இப்படி பல்வேறுதரப்பட்ட பொருளாதார நிலைகளில் இருந்தவர்கள் ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்தோம். பள்ளிக்கூடத்தில் எட்டய புரத்து வாரிசு விஜயன் விலை உயர்ந்த ஆடை அணிந்தும் , இசக்கிராஜன் விலை குறைந்த ஆடை அணிந்தும் உலா வந்திருந்தால், எங்களுக்கிடையே இருந்த பொருளாதார வேறுபாடு பார்ப்பவர்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்திருக்கும். எங்களின் மனங்கள் ஒரு போதும் நெருங்கியிருக்காது.
சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்கள், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தவர்கள் என்று அனைவரும் ஒரே மாதிரி சீருடை அணிந்து பள்ளிக்கு வந்ததால் தான் எங்களுக்குள் உள்ளே இருந்த வேறுபாடுகள் வெளியே தெரியவில்லை.
அனைவரும் ஒன்றாக இணைந்து, சமமாக உறவாடியும் விளையாடியும் மகிழ்ந்தோம். இப்படி ஒருவொருக் கொருவர் வேறுபாடு தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு பள்ளிப் பருவ காலத்தில் ஒரு நிலைமை இருந்து. அதற்கு பள்ளிக்கூடங்கள் பின் பற்றிய சீருடைக் கொள்கை தான் முழு முதற் காரணம்.
இப்போது பள்ளிக்கூடங்கள் பின்பற்றும் சீருடை அமைப்பு, ஏற்றத் தாழ்வுகளை இன்னும் வெளிச்சப் படுத்துகின்றன. அணிந்திருக்கும் சீருடையை வைத்து ஒரு மாணவன் அரசுப் பள்ளி மாணவனாக அடையாளம் காணப்படுகிரறான். எனவே அவன் சரியாக நடத்தப் படுவதில்லை.
வசதி உள்ளோருக்காக என்று தனியார் பள்ளிக்கூடங்கள் பெருகி விட்டன. வசதி உள்ளவர்கள் தங்கள் குழந்தைச் செல்வங்களை இது போன்ற பள்ளிகளில் சேர்ப்பதுதான் பெருமை என்று நினைக்கிறார்கள். மாணவ மாணவியர் அணியும் சீருடையை வைத்து அவர்கள் படிக்கும் தனியார் பள்ளிக்கூடம் எது என்று மக்கள் எளிதில் புரிந்து கொள்கிறார்கள். இந்த சமூகம் அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தை வைத்து வெவ்வேறு நிலைகளில் உயர்வாகவும் தாழ்வாகவும் பார்க்கிறது.
ஏற்றத் தாழ்வுகளை அகற்ற அறிமுகப்படுத்தப்பட்ட சீருடைகள் இன்று மிக எளிதாக மாணவ மாணவியரை தரம் பிரித்து காட்டிக் கொடுத்து விடுகின்றன.
எங்கள் L.I.C அலுவலகத்தில், சார் நிலை பணியாளர்களுக்கு வெள்ளை நிறத்தில் சீருடை வழங்குகிறார்கள். அந்த சீருடையை வைத்து அவர்களின் அலுவலக நிலையை யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். இதனால், அவர்களுக்குள் அவர்கள் அறியாமலேயே ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது.
1970, 80 களில் AIIEA என்ற ஊழியர் சங்கத்தில் சென்னையில் தோழர் ராஜப்பா, தோழர் நடராஜன் , தோழர் V.D சோமசுந்தரம் போன்றோர் தலைவர்களாக இருந்தார்கள். ஊழியர்களின் மனங்களில் ஒருபோதும் தாழ்வு மனப் பான்மை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, அவர்களும் வெள்ளை நிறத்தில் மேல் சட்டை, குழாய் அணிந்து சார் நிலை ஊழியர்களை உற்சாகப் படுத்தியதை நான் நன்கறிவேன். அவர்கள் பணி ஓய்விற்குப் பிறகு இன்றைக்கும் இதே வெள்ளை நிற உடையைத் தான் அணிந்து வருகிறார்கள்.
சீருடைகள், ஏற்றத் தாழ்வுகளை வெளிக்காட்டாமல் இருக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தான் அறிமுகப் படுத்தப்பட்டன. ஆனால் இப்போது எந்தப் பள்ளிக்கூடம் என்பதை அறிந்து கொள்வதற்கான அடயாளாமாக மாறியுள்ளன.
சீருடைகள் ஏற்றத் தாழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் கருவிகளாக இப்போது மாறிவிட்டன.

- பாளை ப. இசக்கிராஜன்

Wednesday, 28 August 2019

பரிவு…பாசம்..எளிமை…



பரிவுபாசம்..எளிமை

2012 வாக்கில் ஒரு முறை நான் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் பயணித்தேன். 72 இருக்கைகள் உள்ள ATR - 72 வகை சிறிய விமானம். ஒவ்வொரு வரிசையிலும், வலப்பக்கம் இரண்டு , இடப் பக்கம் இரண்டு , என்று வரிசைக்கு  நான்கு இருக்கைகள் மட்டும் தான். 

எனது பக்கத்தில்,  ஜன்னல் ஓரம் இருந்த இருக்கையில், முன்னாள் தமிழக சட்டப் பேரவைத் துணைத் தலைவரும், முன்னாள் தமிழக அமைச்சரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், மைய அரசின் முன்னாள் அமைச்சரும், இப்போதைய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு திருநாவுக்கரசர் அவர்கள் அமர்ந்து இருந்தார்கள். 

பயணிகள் அனைவரும் உள்ளே ஏறி வந்து விட்டாலும், ஏதோ சில காரணஙகளுக்காக விமானம் புறப்பட நீண்ட தாமதமாகியது. விமானத்தின் உள்ளேயே முக்கால் மணி நேரமாவது இருக்க வேண்டியிருந்தது. அருகிலிருந்த அரசியல் தலைவரிடம் நான் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேசத் துவங்கினேன். 

அவர் PUC படித்த பாளை தூய சவேரியார் கல்லூரியில் தான் நானும் படித்தேன் என்றும், மாணவர் மன்றத்தில் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டேன் என்றும் கூறினேன். இதைக் கேட்டதும்  மகிழ்ச்சி அடைந்தார். எங்கள் கல்லூரியில் அவருடன் படித்த அவருக்கு நெருக்கமான  வழக்கறிஞர் திரு V.T. திருமலையப்பன் அவர்கள் எனக்கும் நல்லதொரு நண்பர் என்று கூறினேன். 

அறந்தாங்கி தொகுதியில் அவர் முதன் முறை தேர்தல் களம் காணும் போது, அவருக்கு நம்பிக்கையாக உடன் நின்றவர் திரு V.T. திருமலையப்பன் அவர்கள் என்று ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த தகவலை அவரிடம் தெரிவித்தபோது மனிதர் அதிசயப்பட்டார். 

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு தனுஷ்கோடி ஆதித்தன் அவர்களும், மாநிலங்களவை உறுப்பினராக பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதிமுக வின் திரு சௌந்தர் ராஜனும் எனக்கு நல்ல அறிமுகம் என்றேன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு ஆர்.பி.ஆதித்தன் என் வகுப்புத் தோழன் என்றேன். ஆர்வமுடன் அனைத்தையும் கேட்டுவந்தார். 

அவர் தமிழக அமைச்சரவையில் அமைச்சராக இருந்த காலம். அப்போது சிமெண்ட் மிகவும் தட்டுப்பாடாய் இருந்தது. 1983 வாக்கில், அவரது முன் முயற்சியால், தட்டுப்பாட்டை சமாளிக்க, கொரிய நாட்டிலிருந்து சிமெண்ட் இறக்குமதி செய்ய ஏற்பாடாகி இருந்ததுதேவைப்படுவோர் முன் கூட்டியே DD வாங்கி விண்ணப்பத்துடன் சேர்த்து கொடுக்கவேண்டும். விண்ணப்பதோடு கட்டுமானம் நடப்பது  குறித்து  சில ஆவணங்களை யும் இணைக்க வேண்டும். 

ஒரு லாரி லோடு சிமண்ட் வாங்க,  நானும் ரூ  10000க்கு DD வாங்கி கொண்டு சென்னை சென்றேன். அண்ணா சாலை தேவநேயப்பாவாணர் கட்டடத்தில் செயல் பட்டு வந்த தமிழ் நாடு தொழிற் கழக அலுவலகத்தில் கொடுத்து சிமெண்ட் வாங்கிக்கொள்வதற்கான உத்தரவு வாங்கினேன். தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலில் வரும் சிமெண்டை அங்கேயிருந்து நேரடியாக இறக்கி லாரிகளில் கொண்டு செல்லலாம். இந்த உத்தரவைக் காண்பித்து, ஒரு லாரியில் சிமெண்ட் மூட்டைகளை அங்கிருந்து ஏற்றி பாளைக்கு கொண்டு வந்தேன். அந்த தரமான சிமெண்டினால் தான் புதிய வீட்டின்  கட்டிட வேலைகளை முடித்தேன். இந்த தகவலையும் அவரிடம் பகிர்ந்தேன்.

மக்களுடன் அவருக்கிருந்த நேரடித் தொடர்பு குறித்து அவரைப் பாராட்டிப் பேசினேன். அந்த உறவு தான் அவரை பல தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற வைத்தது என்ற உண்மையை நான் உணர்ந்து கொண்டேன் என்று கூறினேன். கேட்டு மகிழ்ந்தார்.  அறந்தாங்கி சட்ட மன்ற எல்கைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் சுக துக்கங்களில் அவர் பங்கு பெற்று வந்தது குறித்து அவரைப் பாராட்டிப் பேசினேன். மிக்க மகிழ்ச்சியடைந்தார். 

அவரது தொகுதியில் வசித்த எனது LIC நண்பர் ஒருவரின் பெயரைக் கூறி அவர் அங்கு கட்டாத வீடு ஒன்றிற்கு புதுமனை புகு விழா அழைப்பிதழ் அட்டை அடித்து அவரிடம் கொடுத்ததையும், அதற்கு அவர் 500 ரூபாயை ஒரு கவரில் வைத்து அன்பளிப்பாக கொடுத்ததையும் கூறினேன். அப்போது அவர் மெலிதாக புன்னகைத்தார்.

அரசியலில் இவ்வளவு ஆர்வமாக இருக்கும் நீங்கள் LIC யில் உயர் அலுவலராக எப்படி என்றெல்லாம் கேட்டார். வேறு பல நாட்டு நடப்புகள்  பற்றியும் விவாதித்தார்.   நானும் அவரது அரசியல் அனுபவங்கள், வெற்றி தோல்விகள், அவர் பெற்ற ஏற்றங்கள், ஏமாற்றங்கள், குறித்து விசாரித்தேன். அவருக்கு சங்கடம் தரும் கேள்விகளை கேட்கவில்லை. பல கேள்விகளுக்கு முழுமையாக பதில் அளித்தார். சில கேள்விகளுக்கு புன் முறுவலை மற்றும் பதிலாகத் தந்தார். இப்படி பல செய்திகளையும்  அலசி ஆராய்ந்தோம். 

மதுரை வரும் வரை, ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் பொழுது போவதே தெரியாமல் பேசி மகிழ்ந்தோம். பயணம் முடியக் கூடிய நேரம் நெருங்கியதும், சென்னை ஷெனாய் நகரில் தான் வீடு உள்ளது என்றார். அவரது இல்லத்திற்கு ஒருமுறை கட்டாயம் குடும்பத்துடன் வர வேண்டும் என்று மிகுந்த பாசத்துடன் அழைத்தார். நான் 2013 ஜனவரி இறுதியில், பணி நிறைவு பெற்றதும், சென்னையை விட்டு உடனே திருச்சிக்கு வந்து விட்டதால், அவரது அன்பு அழப்பை நிறைவேற்ற இயலவில்லை.  நான் தான் அந்த அரிய பொன்னான வாய்ப்பை பயன் படுத்தத் தவறி விட்டேன்.  

இவரது பரிவு, பாசம், மற்றவர்களை மதிக்கும் பண்பு, அனைத்திற்கும் மேலாக இவரது எளிமைஇவை தான் இவரது வெற்றிக்கு அடித்தளம் என்பதை உணர்வு பூர்மாக உணர்ந்து கொண்டேன்.   இந்த பயண அனுபவத்தைப் பற்றியும், திரு திருநாவுக்கரசர் அவர்களின் எளிமை பற்றியம்  என்னுடைய சக அலுவலர் ஒருவரிடம் பகிர்ந்து , வியந்து மகிழ்ந்தேன். நண்பரும் அவருடைய பயண அனுபவம் ஒன்றை என்னிடம் கூறினார். 

ஒரு தடவை, அப்போது மைய அரசில் மிக முக்கிய துறையில் அமைச்சராக இருந்த தமிழ் நாட்டுக் காரர் ஒருவர் விமான பயணத்தின் போது நண்பருக்கு முன் இருக்கையில் அமர்ந்து வந்தாராம். யாருடனும் எதுவும் பேச வில்லையாம். தலை நிமிர்ந்து கூட யாருடைய முகத்தையும் பார்க்க வில்லையாம். இறுகிய முகத்துடன் தான் இருந்தாராம். இறங்கிப் போகும் போது கூட குனிந்த தலை நிமிராமல் தான் சென்றாரம். அவர் நடந்து கொண்ட முறை, தன்னடக்கத்தினால் அல்ல என்று அழுத்தமாகத் தெரிவித்தார்.

அவரும் என்னைப்போலவே இந்த நிகழ்வை எண்ணிப் பார்த்தாராம். அமைச்சரைப் பார்த்ததில் மகிழ்ச்சியாம்.. மீண்டும் எண்ணிப் பார்த்தாராம். முடிவை மாற்றிக் கொண்டாராம். அவரது அணுகு முறை பற்றி மிகவும் வருந்தினாராம். 

மீண்டும் எண்ணிப் பார்த்தால் முடிவு மாறுமோ?

அரசியல் சார்பு எதுவுமின்றி சொல்கிறேன். திரு திருநாவுக்கரசர் போல் மக்களோடு மக்களாக பழகுபவர்கள் மட்டுமே எந்த நிலையிலும் மக்கள் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்தவொரு நிலையிலும் தாழ்ந்து போக மாட்டார்கள்.  இது தான்  மக்கள் தலைவர்களின் வெற்றி ரகசியம்.


- .இசக்கிராஜன்.

Boulevard & Avenue



Boulevard & Avenue


திருச்சி மாநகரத்தின் மையப்பகுதியில் உள்ள இரண்டு இணை சாலைகள் West Boulevard சாலையும் East Boulevard சாலையும். திருச்சி நகருக்கு வந்த புதிதில் இந்த பெயரை உச்சரிக்கவே திணறி இருக்கிறேன். 

West Boulevard சாலை மெயின் கார்டு கேட் டில் துவங்கி காந்தி மார்க்கெட் சாலை வரை நீண்டிருக்கும்.  East Boulevard சாலை என்பது ரயில்வே கேட் தொடங்கி காந்தி மார்க்கெட் சாலை வரை நீண்டிருக்கும்.  அதனை EB ரோடு என்று சுருக்கமாகவும்  அழைப்பார்கள். நான் கூட அந்த சாலையில் மின் வாரிய அலுவலகம் ஏதாவது இருக்கும். அதனால் தான் EB ரோடு என்று அழைக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன்.  சமீபத்தில் தான்  East Boulevard ரோடு என்பதன் சுருக்கம் தான் EB ரோடு என்று புரிந்து கொண்டேன். 

Boulevard என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பொருள் புரியாமலேயே நீண்ட காலம் இருந்து வந்தேன். மாநகராட்சி அதனை மேல அரண் சாலை என்றும், கிழக்கு அரண் சாலை என்றும் மொழி மாற்றம் செய்திருந்தனர். நான் அரண் என்பது ஏதோ மதில் சுவர் மாதிரி என்று நினைத்துக்கொண்டேன்.

இதைப் போலவே சென்னையில் 1970களில் முளைத்த அண்ணா நகரில்  ஒவ்வொரு சாலைக்கும், இத்தனாவது அவெனியூ, அத்தனாவது அவெனியூ என்று வரிசையாக பெயர் வைத்திருக்கின்றனர்.  அவெனியூ என்பது எதைக் குறிக்கும் என்று பல வருடங்களாக எனக்குள் ஒரு கேள்வி வந்து போய்க் கொண்டே இருந்தது.  மாநகராட்சி அதனை நிழற் சாலை என்று தமிழ்ப் படுத்தியிருந்தார்கள். தமிழ்ச்  சொல் புரிந்திருந்தாலும் அதன் சரியான பொருள் புரியவில்லை. என் அறியாமையை வெளிக்காட்டாமல  காலத்தை ஓட்டி வந்தேன். 

மனசு பொறுக்கவில்லை. நமக்கு பல வகைகளில் வழிகாட்டவும், நமக்குள் இருக்கும் அறியாமை என்ற இருளை அகற்றி ஒளிகாட்டவும், உருவமில்லாத Google Aandavar  ஒருவர் இருக்கிறாரே.. அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வோம் என்று முடிவு செய்தேன்.  அந்த கூகிள் ஆண்டவரைக் கலந்து ஆலோசிக்க முடிவெடுத்து என் மடிக்கணினியின் வில்லைகளை விரைவாகத் தட்டி விட்டேன். விளக்கங்கள் மடியில் வந்து விழுந்து குவிந்தன.

Boulevard என்பதற்கும், Avenue என்பதற்கும் சற்றேறக்குறைய ஒரே பொருளைத் தான் தெரிவித்தார்.  இரண்டு பக்கங்களிலும் வரிசையாக மரங்கள் நிறைந்திருக்கும் அகலமான, அழகான  ஒரு சாலை என்பதைத்தான் அந்த இரண்டு ஆங்கிலச் சொற்களும் குறிப்பிடுகின்றன. 

ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் அவர்கள் பொருத்தமாக, ஆங்கிலத்தில் திருச்சி நகரில் Boulevard என்று பெயர் வைத்ததை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.  தமிழக அரசால் சென்னை மாநகரத்தில் அமைக்கப்பட்ட அண்ணா நகருக்கு அழகு தமிழில் ஆயிரம் சொற்கள் இருக்கும்போது ஏன் Avenue என்ற ஆங்கிலச் சொல்லை பயன்படுத்தினார்கள் என்பதைத் தான் புரிந்து கொள்ள முடிய வில்லை. 

அரண் சாலை என்றும் நிழற் சாலை என்றும் பெயர் சூட்டியதற்குப் பதில் இதே பொருள் தரும் வேறு சில அழகு  சொற்களை எளிய தமிழில் பயன் படுத்தி இருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.  

- பாளை .இசக்கிராஜன்.

அனைத்திலும் சுத்தம்



அனைத்திலும் சுத்தம் 


என்னுடைய நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமத்தை கேரளத்தில் இருந்த போது 1990 ல் திருவல்லா RTO அலுவலகத்தில் பெற்றேன். அரசு அறிவித்துள்ள உரிய கட்டணத்தைத் தவிர கூடுதலாக பத்து காசு கூட யாரும் அன்பளிப்பு கேட்கவில்லை. நானும் கொடுக்கவில்லை. அங்கு வாழும் மக்களிடம் இருக்கும் விழிப்புணர்வு தான் இதற்கு அடிப்படைக் காரணம். 

திருவல்லாவிலிருந்து  பலமுறை நெல்லைக்கு என்னுடைய காரில் வந்து போயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் தமிழ் நாட்டு எல்லையைக் கடக்கும் போதும் சோதனைச் சாவடியில் இருப்பவர்கள் கை நீட்டுவார்கள். மறுப்பு தெரிவித்தால் 20 ரூபாய்க்கு கொடி யாவது வாங்கச் சொல்லி  வற்புறுத்துவார்கள். கேரளத்து சாவடிகளில் ஒரு போதும் இப்படி நடந்ததில்லை. 

1992 ல் எனக்கு திருவல்லாவிலிருந்து திருச்செந்தூருக்கு பதவி உயர்வில் இட மாற்றம் வந்தது . திருவல்லா வீட்டைக் காலி செய்து, வீட்டுப் பொருட்களை ஒரு லாரியில் ஏற்றி தமிழ் நாட்டிற்கு அனுப்பினேன். பொருட்களை ஏற்றி வந்த அதே வண்டியில் நானும் உடன் வந்தேன். 

கேரள சோதனைச் சாவடியில் ஆவணங்கள் கேட்டார்கள். அலுவலகத்திலிருந்து வந்திருந்த இட மாறுதல் உத்தரவு, வீட்டுச் சாமான்களின் விவரப் பட்டியல் போன்றவற்றை காண்பித்தேன். 

தமிழ் நாட்டில் நடைமுறையிலிருந்த வழக்கப்படி, ஆவணங்களோடு சேர்த்து ஒரு 20 ரூபாய் தாளையும் சேர்த்துக் கொடுத்தேன். அங்கிருந்த அலுவலர், ஆவணங்களைச்  சரி பார்த்து விட்டு, பணத்தை எடுக்காமல், புறங்கையை ஆட்டி, ஒரு "ச்சு ச்சு"  என்ற ஒலி எழுப்பி என்னைத்  திருப்பி அனுப்பினார். 

அந்த சுகமான  அனுபவம், மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. இன்றைக்கும் இது போன்ற நிலைமை அங்கு தொடர்கிறது. அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, பொதுவுடைமைக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் சரி இது தான் அங்குள்ள  நிலைமை.

எங்கள் வாகனம் கேரள எல்லையைத் தாண்டி தமிழ்  நாட்டின் புளியரையில் உள்ள  சோதனைச் சாவடியில் நின்றது. ஓட்டுநருடன் நானும் கீழே இறங்கி,  ஆவணங்களை அங்கிருந்த அலுவலரிடம் காண்பித்தேன். அத்துடன் சேர்த்து 100 ரூ தாளையும் சேர்த்தே கொடுத்தேன். அவற்றை சரி பார்த்த அலுவலர், அனைத்தும் சரியாக இருந்தாலும் 100 ரூபாய் குறைச்சல் என்று நினைத்திருக்கிறார். 

ஆவணங்களைத்  திருப்பித் தராமல், என்னிடம் கூடுதலாக பணம் பறிக்க என்ன செய்யலாம் என்று சிறிது நேரம் யோசித்தார். பிறகு நாங்கள் வந்த வாகனத்தின் ஓட்டுநர் சீருடை அணியாமல் இருக்கிறார். அதற்கு ரூ 500 அபராதம். அதை  நீதி மன்றத்தில் தான் செலுத்த வேண்டும் என்று பயமுறுத்தினார். நான் அதிர்ச்சியுடன்  ஓட்டுநரைப் பார்த்தேன். 

ஓட்டுநர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கையை விரித்து விட்டார். அன்பளிப்பாக  கூடுதல் பணத்தைக் கொடுக்கா விட்டால், வண்டியை அனுப்ப தாமதிப்பார்கள் என்றும் கவலைப்பட்டார். 

இந்த தாமதத்திற்காக நான் வண்டி வாடகையை உயர்த்திக் கொடுக்க வேண்டி வரும் என்றும் கூறினார். இந்த சிக்கலைத்  தீர்க்க அந்த அலுவலருக்கு ஒரு 300 ரூபாய் அன்பளிப்பாக கொடுத்து விடும்படியும்  ஆலோசனை கூறினார். 

நானும் வேறு வழி இல்லாமல் இன்னொரு 200 ரூபாயை அவரிடம் தண்டம் கொடுத்து அழுதேன். அதற்குப் பின்னர் தான் எங்களால் வண்டியை எடுக்க முடிந்தது. 

இந்த நிலைமை தமிழ் நாட்டுச் சோதனைச் சாவடிகளில் காலங்காலமாகத்  தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 

கேரள மக்களிடம் இயற்கையிலேயே நிறைந்துள்ள விழிப்புணர்வும், போராட்ட குணமும் தமிழ் நாட்டு மக்களிடம் இல்லாதது மிகப் பெரிய குறை.  இந்த நற் குணங்கள் நம் மக்களிடம் ஏற்படும் வரை லஞ்ச மலத்தோடு தான் நாம் இணைந்து வாழ வேண்டும். வேறு வழி யில்லை. 

ரோம் நகரில் வாழும்போது ஒரு ரோமானியனாகத்தான் வாழ வேண்டும். இது தானே நடைமுறை. 

அகச் சுத்தம், மனச் சுத்தம், வாய்ச்சுத்தம், கைச் சுத்தம் என்று அனைத்துச் சுத்தங்களும் வெகு விரைவில் நம் தமிழ் நாடு முழுதும் ஏற்படட்டும். 

-பாளை .இசக்கிராஜன்.



Sunday, 25 August 2019

மரியாதையும் கண்ணியமும்...


மரியாதையும் கண்ணியமும்...

என்னுடைய வாகன ஓட்டுநர் அனுமதி அட்டையில் பெயரிலும், முகவரியிலும் சிறு திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தன. 

விண்ணப்பங்களையும், வேறு சில ஆவணங்களையும் ஆன் லைன் மூலம் பதிவேற்றும் வசதி வந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. 

இந்த ஆன் லைன்  முறை மிகவும் எளிமையாகத்தான் இருக்கிறது. இந்த இரண்டு மாற்றங்களையும் செய்வதற்கு அரசிற்குச் செலுத்த வேண்டிய  கட்டணம் ரூ 700. இதையும் ஆன் லைனில் செலுத்தி விடலாம். 

புகைப்படம் எடுக்க அந்த அலுவலகத்திற்கு நேரில் தான் செல்லவேண்டும். என்றைக்கு நேரில்  வரவேண்டும், எந்த நேரத்தில் வரவேண்டும் என்பதை நாமே நமது வசதிக்கேற்றபடி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 

இந்த ஆன் லைன் முறை  மிகவும் எளிதாக இருக்கிறது . ஸ்கேனர், மடிக்கணினி போன்றவை வீட்டில் இருப்பதால் நானே தனியாக பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். என்றாலும், ஆன் லைன் முறையை  தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு முன் தொடர்புடைய அந்த அலுவலகத்திற்கு ஒரு முறை நேரில் சென்று அங்கு நடப்பதை அறிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.

ஒருநாள் காலை 1030 மணி அளவில் அந்த அலுவலகம் சென்றேன். மஞ்சப் பையை கையில் வைத்துக்கொண்டு சில முகவர்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. 

ஆன் லைன் மூலம் பதிவேற்றிய படிவங்களின் பிரதியை அச்சு எடுத்து அதில் கையொப்பமிட்டு, ஒரு அலுவலரிடம் கொண்டு கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு பெண்மணி தான் அங்கு அலுவலராக இருந்தார். அவர் படிவங்களை சரிபார்த்த பிறகு புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதி அளித்து வந்தார்.

எந்த எந்த படிவங்கள் நேரடியாக வருகின்றன, எந்த எந்த படிவங்கள் முகவர்கள் மூலம் வருகின்றன என்று அந்த அலுவலருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. மிகவும் பணிவுடன் முகவர்கள்  கொடுக்கும் விண்ணப்பப் படிவங்களை, சிரித்த முகத்துடன் வாங்கி அனைத்தும் சரி யாக இருக்கின்றன என்று சொல்லி புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கினார். 

தாங்களாகவே பிரதி எடுத்து நேரடியாக விண்ணப்பங்களுடன் வருபவர்களிடம் சிடு சிடு என்று சீறிப் பாய்ந்தார். நாயை விரட்டுவது போல் எரிச்சலுடன் சில கேள்விகளைக் கேட்டு கடுப்பேத்தினார். விண்ணப்ப தாரர்களைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. 

இந்த காட்சிகளைப் பார்த்த பிறகு, முகவர் மூலமே விண்ணப்பத்தை கொடுத்து மரியாதையை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்நல்லதொரு நாளில் முகவர் மூலமே ஆன் லைன் பதிவேற்றங்களை செய்து முடித்தேன். பிறகு நகலெடுத்த படிவங்களை எடுத்துக்கொண்டு அந்த முகவருடன் அலுவலகம் சென்று அவர் மூலம் அலுவலகத்தில் கொடுத்தேன். 

அவமானம் எதுவுமின்றி மரியாதையுடன் நடத்தப்பட்டேன். இரண்டே நிமிடங்களில் அனைத்தும் OK என்று சொல்லிவிட்டார்கள். புகைப்படம் எடுக்கும் இடத்திற்குள் எளிதாக நுழைய முடிந்தது. வேலை மிக விரைவாகவும் எளிதாகவும்  முடிந்தது.  அரசுக்குச் செலுத்திய ரூ 700 உடன் கூடுதலாக ரூ 700 முகவரிடம் கொடுக்க வேண்டி வந்தது. அந்த ரூ 700  யார் யாருக்கெல்லாம் போய்ச் சேர்ந்தது என்று தெரியவில்லை.

இதற்கு முன்பு 1990 களில், ஒரு முறை அந்த துறையின் நெல்லை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த நெருங்கிய நண்பன் ஒருவன் மூலம் எனது ஓட்டுநர் அனுமதியை புதுப்பிக்க விண்ணப்பம் கொடுத்தேன்.  நண்பன் என்பதால் கூடுதலாக காசு எதுவும் நான் கொடுக்க வில்லை. அவனும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. மகிழ்ச்சியுடன் புதுப்பித்துக் கொடுத்து உதவினான். அப்போதெல்லாம் புகைப்படம் எடுக்க நாம் நேரில் செல்லத் தேவை யில்லாத காலம்.

அந்த அலுவலக நடை முறைப்படி, நாள் முடிவில் அன்றைய அன்பளிப்பு வசூலை பங்கு வைத்திருக்கின்றனர்.  என்னுடைய ஓட்டுநர்  அனுமதி  புதுப்பித்தலுக்குண்டான  அன்பளிப்புப்பணம் ரூ 500 ரொக்கமாக வந்து விட்டது  போல் வரவு வைத்திருக்கிறார்கள். பிறகு அதையும் சேர்த்து அன்றைய மொத்த வசூலை ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட விகிதத்தில் பங்கு பிரித்திருக்கிறார்கள். 

எனது நண்பனுக்கு சேர வேண்டிய பங்குப் பணத்தில், என்னுடைய அனுமதி புதுப்பித்தலுக்கு வரவேண்டிய  அன்பளிப்பு பணமான ரூ 500 குறைத்துக் கொண்டு மீதியை அவனிடம் கொடுத்திருக்கிறார்கள்.  இந்த தகவல் எனக்கு மிகவும்  தாமதமாகத் தான் தெரிய வந்தது. எனக்கு உதவப் போய் பாவம் என் நண்பனுக்கு ரூ 500 இழப்பு. வருத்தமாக இருந்தது. இந்த தகவல் தெரிந்து கொண்ட பிறகு நான் என் நண்பனை அணுகுவதில்லை.  அதற்குப்பிறகு தேவைப்படும் அந்த அலுவலகத்துப் பணிகளை எங்கள் ஜீப் டிரைவர் ராமசாமி அவர்கள் உதவியுடன் ஒரு முகவர் மூலம் முடித்து வந்தேன்.

அன்பளிப்புப் பணத்தை பங்கு வைத்துக் கொள்வதில் பின்பற்றும் மிகவும் நேர்மையான, கண்ணியமான முறை  எனக்கு இன்றைக்கும் பிடித்திருக்கிறது.

- பாளை .இசக்கிராஜன்