பள்ளியில் சீருடை
நான் 1964ல் ஆறாம் வகுப்பு படிக்கும்போது தான் சீருடை அணிவது பற்றி தெரிந்து கொண்டேன். அப்போது அனைத்துப் பள்ளிகளிலும் மேல் சட்டை வெள்ளை நிறத்தில் மட்டும் தான் இருக்கும். அரைக்கால் டவுசர் நிறம் மட்டும் பள்ளிக்கு பள்ளி மாறுபடும்.
எங்களது தூய சவேரியார் பள்ளியில் அரைக்கால் டவுசர் "நேவி ப்ளூ" நிறம். பக்கத்தில் இருந்த தூய யோவான் பள்ளியில் "காக்கி" நிறத்தில் டவுசர். கதீட்ரல் பள்ளியில் செங்கல் நிறம் போன்ற ஒரு "சிகப்பு" நிறம்.
எங்கள் வகுப்பில் எட்டயபுரத்து ஜமீன் குடும்பத்து இளவரசு வெங்கட விஜயன் ஒரு மாணவன். பெரு நிலக்கிழார் திரு அம்மையப்ப முதலியார் அவர்களின் புதல்வன் நமச்சிவாயம் ஒரு மாணவன். வண்ணாரப் பேட்டை பண்ணையார் குடும்பத்து கிருஷ்ண சீனிவாசன் ஒரு மாணவன்.
ACA சிட் பண்டு நிறுவன உரிமையாளர் திரு ராமசாமி அவர்களின் புதல்வன் சீனிவாசன் ஒரு மாணவன். அஞ்சல் அலுவலகத்தில் வேலைபார்த்து வந்த ஊழியர் திரு குமார் அவர்களின் புதல்வன் திரு பால்ராஜ் ஒரு மாணவன். காவல்துறை ஆய்வாளர் ஒருவரின் புதல்வன் திரு குமார் என்ற மாணவன். கோவில் பட்டி மீனாட்சி மேட்ச் பேக்டரி குடும்பத்து ராஜசேகர் ஒரு மாணவன்.
விருதுநகர் திரு ராதாகிருஷ்ணன் என்ற மருத்துவர் அவர்களின் புதல்வன் ரவீந்திரன் ஒரு மாணவன். லயோலா கான்வெண்ட் ஆசிரியை திருமதி பாமா டீச்சரின் புதல்வன் சங்கரலிங்கம் ஒரு மாணவன். திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு G.R.எட்மண்ட் அவர்களின் மைத்துனர் ரூபன் ஒரு மாணவன்.நெல்லை மாவட்டத்து ஆட்சித் தலைவர் திரு MAK தயாப் அவர்களின் தம்பி ஒரு மாணவன்.
மாவட்ட நீதியரசரின் புதல்வன் சீனிவாசன் ஒரு மாணவன். இவர்களோடு பாளை காந்தி மார்க்கெட் ஏழை கணக்கப் பிள்ளை பலவேசம் பிள்ளையின் புதல்வன் இசக்கிராஜன் என்ற நானும் ஒரு மாணவன்.
இப்படி பல்வேறுதரப்பட்ட பொருளாதார நிலைகளில் இருந்தவர்கள் ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்தோம். பள்ளிக்கூடத்தில் எட்டய புரத்து வாரிசு விஜயன் விலை உயர்ந்த ஆடை அணிந்தும் , இசக்கிராஜன் விலை குறைந்த ஆடை அணிந்தும் உலா வந்திருந்தால், எங்களுக்கிடையே இருந்த பொருளாதார வேறுபாடு பார்ப்பவர்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்திருக்கும். எங்களின் மனங்கள் ஒரு போதும் நெருங்கியிருக்காது.
சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்கள், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தவர்கள் என்று அனைவரும் ஒரே மாதிரி சீருடை அணிந்து பள்ளிக்கு வந்ததால் தான் எங்களுக்குள் உள்ளே இருந்த வேறுபாடுகள் வெளியே தெரியவில்லை.
அனைவரும் ஒன்றாக இணைந்து, சமமாக உறவாடியும் விளையாடியும் மகிழ்ந்தோம். இப்படி ஒருவொருக் கொருவர் வேறுபாடு தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு பள்ளிப் பருவ காலத்தில் ஒரு நிலைமை இருந்து. அதற்கு பள்ளிக்கூடங்கள் பின் பற்றிய சீருடைக் கொள்கை தான் முழு முதற் காரணம்.
இப்போது பள்ளிக்கூடங்கள் பின்பற்றும் சீருடை அமைப்பு, ஏற்றத் தாழ்வுகளை இன்னும் வெளிச்சப் படுத்துகின்றன. அணிந்திருக்கும் சீருடையை வைத்து ஒரு மாணவன் அரசுப் பள்ளி மாணவனாக அடையாளம் காணப்படுகிரறான். எனவே அவன் சரியாக நடத்தப் படுவதில்லை.
வசதி உள்ளோருக்காக என்று தனியார் பள்ளிக்கூடங்கள் பெருகி விட்டன. வசதி உள்ளவர்கள் தங்கள் குழந்தைச் செல்வங்களை இது போன்ற பள்ளிகளில் சேர்ப்பதுதான் பெருமை என்று நினைக்கிறார்கள். மாணவ மாணவியர் அணியும் சீருடையை வைத்து அவர்கள் படிக்கும் தனியார் பள்ளிக்கூடம் எது என்று மக்கள் எளிதில் புரிந்து கொள்கிறார்கள். இந்த சமூகம் அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தை வைத்து வெவ்வேறு நிலைகளில் உயர்வாகவும் தாழ்வாகவும் பார்க்கிறது.
ஏற்றத் தாழ்வுகளை அகற்ற அறிமுகப்படுத்தப்பட்ட சீருடைகள் இன்று மிக எளிதாக மாணவ மாணவியரை தரம் பிரித்து காட்டிக் கொடுத்து விடுகின்றன.
எங்கள் L.I.C அலுவலகத்தில், சார் நிலை பணியாளர்களுக்கு வெள்ளை நிறத்தில் சீருடை வழங்குகிறார்கள். அந்த சீருடையை வைத்து அவர்களின் அலுவலக நிலையை யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். இதனால், அவர்களுக்குள் அவர்கள் அறியாமலேயே ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது.
1970, 80 களில் AIIEA என்ற ஊழியர் சங்கத்தில் சென்னையில் தோழர் ராஜப்பா, தோழர் நடராஜன் , தோழர் V.D சோமசுந்தரம் போன்றோர் தலைவர்களாக இருந்தார்கள். ஊழியர்களின் மனங்களில் ஒருபோதும் தாழ்வு மனப் பான்மை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, அவர்களும் வெள்ளை நிறத்தில் மேல் சட்டை, குழாய் அணிந்து சார் நிலை ஊழியர்களை உற்சாகப் படுத்தியதை நான் நன்கறிவேன். அவர்கள் பணி ஓய்விற்குப் பிறகு இன்றைக்கும் இதே வெள்ளை நிற உடையைத் தான் அணிந்து வருகிறார்கள்.
சீருடைகள், ஏற்றத் தாழ்வுகளை வெளிக்காட்டாமல் இருக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தான் அறிமுகப் படுத்தப்பட்டன. ஆனால் இப்போது எந்தப் பள்ளிக்கூடம் என்பதை அறிந்து கொள்வதற்கான அடயாளாமாக மாறியுள்ளன.
சீருடைகள் ஏற்றத் தாழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் கருவிகளாக இப்போது மாறிவிட்டன.
- பாளை ப. இசக்கிராஜன்
No comments:
Post a Comment