என்னுடைய பேரன்.
பதின்மூன்று வயதுச்சிறுவன்.
நாட்டு நடப்புகளையெல்லாம்
தெளிவாகத்தெரிந்து வைத்துள்ளான்.
கமிஷன் கரப்ஷன் லஞ்சம்
ஊழல் பற்றியெல்லாம்
தொலைக்காட்சி செய்திகள்
மூலம் அறிந்துவைத்திருக்கிறான்.
எதிலெல்லாம் எப்படியெல்லாம்
அமைச்சர்கள் கமிஷன் பெறுகிறார்கள்
என்பதைப்பற்றி ஓரளவு
புரிந்துவைத்திருக்கிறான்.
சமீபத்தில் அவனை
தஞ்சாவூர் பெரிய கோவில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
சங்கரன் கோவில் கோமதி அம்மன்
கோவில் களுக்கெல்லாம்
அழைத்துச் சென்றேன்.
கோவில் கட்டிடங்களின்
பிரம்மாண்டங்களைப்பார்த்து
பிரமித்து விட்டான்.
கோவிலைக் கட்டிய
அரசர்கள் எப்படியெல்லாம்
யோசித்திருப்பார்கள்
எப்படிக்கட்டியிருப்பார்கள்
என பல கேள்விகளால் என்னை
துளைத்தெடுத்துவிட்டான்.
கடைசியாக என்னைப்பார்த்து
" தாத்தா..
அந்த அரசரின்
அமைச்சர்கள்
இந்த கோவில் கட்டுவதில்
எத்தனை சதவிகிதம்
கமிஷன் அடித்திருப்பார்கள்?"
என்ற கேள்வியை கேட்டான்.
என்ன பதில் சொல்வது
என்று எனக்குத் தெரியவில்லை.
உங்களிடம் பதில் உள்ளதா?
No comments:
Post a Comment