"ஏல எசக்கி...
இந்த ஆனா மூனா வை
பத்தி அன்னைக்கு
ஒரு சேதி
பேசுனமுல்லா..
அவொ இப்பம் எப்புடி
இருக்காவொளாம்?..
புது தகவல் எதாவது
உண்டால"
இப்பிடி கேட்டுக்கிட்டே
சேக்காளி சொடல
ஏங்கிட்ட வந்தான்.
அன்னைக்கு
அவொள பத்தி
பேசுனபொறவு
நம்ம பேசுனத இஸ்மாயில்
பாய் கிட்ட சொன்னேன்.
அப்போ இஸ்மாயில் பாய்
ஆனா மூனா
இப்போ ரொம்ப
தளந்திட்டாவொ..
அவொளால
நாம பேசுதத
சரியா கூட
கேக்கமுடியல.
சொல்ல வேண்டியதை
எளுதிதான்
காமிக்கவேண்டியது
இருக்கு.
ஆனா அந்த பழய
கம்பீரம் மட்டும்
இன்னய்க்கும் போவல.
அப்படியே இருக்கு ன்னு
சொன்னாவொ.
இந்த தகவல அப்பிடியே
சேக்காளி சொடல கிட்ட
சொன்னேன்.
"அப்புடியாவே..
எப்பிடிப்பட்ட மனுசன்
அவருன்னு ஒமக்கு
தெரியுமா?
ஒமக்குல்லாம்
அவரைப்பத்தியும்
தெரியாது.
அவரு தெறமை
பத்தியும் தெரியாது.
நக்கல் மட்டும்
நல்லா பண்ணுவ" ன்னு
சொல்லிட்டு அவரைப்பத்தி
சொல்ல ஆராம்பிச்சாரு சொடல.
"1992 லயோ 93 லயோ
ஆஷா தீப் ன்னு ஒரு திட்டம்
அறிமுகமாச்சு.
அது ஒரு குறிப்பிட்ட
காலத்துக்கு மட்டுந்தான்
கெடைக்கும்னு சொன்னாவொ.
அப்போ நாந்தாம்வே
திருச்செந்தூர்ல மேனேஜரு.
நான்
ஏஜண்டு மீட்டிங்குல்லாம்
நடத்தி ஏஜெண்டுமார்க்கு
பாலிசி பத்தி நல்லா
விளக்கி கூறி
நெறய பாலிசி
விய்க்கணும்னு
சொன்னேன்.
ஒவ்வொரு
வயசுக்காரருக்கும்
ஒவ்வொரு அளவு
காப்புத்தொகைக்கும்
எவ்வளவு பிரிமியம்னு
கணக்குப்பாத்து
ஒரு பட்டியல்லாம்
தயாரிச்சு கொடுத்தேன்.
அந்த வெளக்க க்கூட்டத்துக்கு
ஆனா மூனா வரல.
ஒருநாளு அவரோட
சொந்தக்காரரு ஒருத்தரு
மெட்ராஸ் போயிட்டு
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்ல
திரும்பி வந்துருக்காரு.
அவரோட பெட்டியில
திருநெவேலி ஏஜண்டு
நரசிம்மன்னு ஒருத்தரும்
வந்திருக்காரு.
நரசிம்மன் புதிய திட்டத்தை
பத்தி நல்லபடி வெளக்கி சொல்லியிருக்காரு.
ஆனா மூனாவின்
சொந்தக்காரருக்கு
அந்த திட்டம்
நல்லா புடிச்சுப்போச்சு.
ஊருக்குப்போயி தகவல்
சொல்லுதன்னு நம்ம ஆளு
நரசிம்மங்கிட்ட
சொல்லியிருக்காரு.
ஏஜெண்டு நரசிம்மன்
திருநெல்வேலியில
எறங்கிட்டாரு.
நம்ம ஆளு
ஊருக்கு வந்ததும்
ஆனா மூனாவைக்கூப்புட்டு
ஏன் மாமா இவ்வளவு
அருமையான திட்டத்தை பத்தி
ஏங்கிட்ட ஏன் சொல்லலன்னு
கேட்டுருக்காரு.
ஒடனே நம்ம ஆனா மூனா
எனக்கு போனை போட்டாரு.
என்னய்யா மேனேஜரு..
இந்த திட்டத்தை பத்தி எனக்கு
ஏன் சொல்லலன்னு
ஏங்கிட்ட கேட்டாரு.
நான் ஒடனே
ஒங்கள கூட்டத்துக்கு
வரச்சொன்னேன் .
நீங்க வரல.
இந்த திட்டத்தை பத்தி
வெவராமா ஒரு லெட்டரு,
சுளுவா தெரிஞ்சுக்க
வயசுக்கேத்த பிரிமியம்
பட்டியல் லாம்
தபால்ல அனுப்பிச்சு
எத்தனை நாளாச்சு
தெரியுமான்னு கேட்டேன்.
அதுக்கு ஆனா மூனா
நாம அனுப்புத கவரை
அமுக்கியும் தடவியும்
பாப்பாராம்.
அதுல ஸ்டேப்ளர் பின்
அடிக்கப்பட்டுருந்தா
கமிஷன் செக் இருக்குன்னு
நெனச்சு கவரை
ஒடைப்பாராம்.
மத்த கவரையெல்லாம்
ஒடைக்கவேமாட்டாராம்.
அதுனால நாங்க
அனுப்பியிருந்த கடிதத்தை
ஒடச்சு பாக்கலயாம்.
இந்த சேதியை
ஏங்கிட்ட சொல்லிட்டு
ஒடனே 25 வயசு காரருக்கு
2 லட்சம் "சம் அஸ்ஸூர்டு"க்கு
இயர்லி பிரிமியம்
எவ்வளவு வரும்னு
சொல்லுங்கன்னு
போன்லயே கேட்டார்.
நானுஞ்சொன்னேன்.
அவரும் புரபோசல்ல
கையெழுத்து வேங்கிட்டு
முழுக் காசோட
ஆபீசுக்கு வந்தாரு.
இந்த திட்டம்
அருமையா இருக்கு..
வெளக்கிச் சொல்ல
ஈசியாவும் இருக்குன்னு
ஏங்கிட்ட சொல்லிட்டு
அந்த மாசம்முழுசும்
இந்த திட்டத்துல தான்
கவனஞ்செலுத்துனாரு.
பாலிசி விற்பதற்கான
கடைசிநாளான 31 ஜனவரி
நெருங்க நெருங்க
அய்யா ரொம்ப
பிசியாயிட்டாரு.
பாக்கப்போற
எல்லாருகிட்டயும்
இந்த அற்புதமான திட்டம்
ஜனவரி 31 வரைதான்
விற்பனைக்கு கிடைக்கும்.
அதுக்கு பொறவு
யாருக்கும் கெடைய்க்காது.
ஜனவரி 31க்கு பொறவு
நம்ம ஜனாதிபதி
சங்கர்தயாள் சர்மா
எல்ஐசி சேர்மனை
கூப்பிட்டு எனக்கு
இந்த பாலிசி ஒண்ணு
கட்டாயம் வேணும்னு கேட்டா
சேர்மனால கூட
ஜனாதிபதிக்கு
பாலிசி வழங்கமுடியாது ன்னு
சொல்லி சொல்லியே
நெறைய பாலிசி வித்தாரு.
கேக்குறவங்களுக்கும்
இவரு சொன்ன முறை
பிடிச்சுப்போச்சு.
அவரு உண்மையத்தான்
சொன்னாரு.
எல்லோருக்கும்
புரியும்படி எளிமையான
சொன்னாரு.
அவருக்குத்தான்
இந்த பாலிசி வித்ததுல
ப்ராஞ்சுலயே மொத இடம்.
ஒரு சாதாரண தகவலை
அதோட முக்கியத்துவத்தை
ஒணர்த்த ஒபயோகித்த
ஒவமை எவ்வளவு
ஒசத்தின்னு பாருடே..
அதுலயிருந்து
செல ஏஜெண்டுகள்
"ஆனா மூனா"வை
சங்கர் தயாள் சர்மான்னே
கூப்புட ஆரம்பிச்சாட்டாவொ.
இந்த மாதிரி
எடுத்துச்சொல்ல
ஆனா மூனா தவுர
வேற யாருக்கும்
தோணுச்சால..
தோணவே தோணாது...
அதுனால தான்
நான் அடிச்சுச்சொல்லுதேன்.
ஆனா மூனான்னா
அனுபவம்...& ....முதிர்ச்சி."
இப்படி சொடல சொன்னதும்
ஆளைப் பாக்காமலே
ஆனா மூனா மேலே எனக்கு
தனி மரியாதை வந்துட்டு.
உங்களுக்கு....?
No comments:
Post a Comment