"ஏல எசக்கி..
என்னல நீ நேத்து
செல்லையாவைப்பத்தி
பேசிட்டு இருக்கும்போதே
டிமிக்கி கொடுத்துட்டு
போயிட்ட" ன்னு
கேட்டுக்கிட்டே
சேக்காளி சொடல வந்தான்.
"ஆமாய்யா..வீட்டுக்காரி
திடீர்னு கூப்புட்டதால
ஓடிட்டேன்.
இப்பதாம் வந்துட்டம்லா.
ஏசாதேரும்வே..
ஆமய்யா இந்த
செல்லையா கிட்டயிருந்து
திருப்பி வராத கடனை
சுளுவா வசூலிக்க
வேற எதாவது
லேசான வழி இருக்கா..
அந்த பேங்குக்கு புதுசா
மேனேஜரா
வந்திருக்கவொ
ஏம் பெஞ்சாதியோட
தாய்மாமாய்யா..
அவருக்கு
ஒதவணும்.
எதாவது நல்ல
யோசனை இருந்தா
யோசிச்சு சொல்லும்வே"
ன்னு சேக்காளிகிட்ட கேட்டேன்.
சொடலை சென்னான்.
" நல்லா கேட்டுக்கல
எசக்கி..
முந்தி நான் வேல செய்த
ஒரு ஊர்ல ஒரு டீச்சர்.
நல்ல வசதியான
குடும்பத்துல இருந்து
வந்தவொ.
அவொ அப்பா
கவர்மெண்டுல
வேல பாத்து
பென்ஷன் ஆன
நேர்மையான அதிகாரி.
டூச்சரோட வீட்டுக்காரரு
பக்கத்தூர்ல இருக்குற
பிரைவேட் கம்பனில
நல்ல வேலையில் தான்
இருக்காவொ.
எல்ஐசி யின்
வீட்டுவசதி கடன்
கம்பெனில கடன் வாங்கி
வீடு கட்டியிருக்காவொ.
எதோ ஒரு காரணத்தால ஆறுமாசப்பாக்கி
விழுந்திடுச்சு.
எல்ஐசி வீட்டு வசதி
ஆஃபீசிலிருந்து அனுப்புற
லெட்டரையெல்லாம்
அவரு சட்டையே பண்ணல.
என்ன தான் நடக்கும்ங்குற
அசட்டுத் தைரியத்துல
சும்மா இருந்துட்டாரு.
ஒரு நாளு
அந்த ஆபீசிலிருந்து
ரெண்டுபேரு என்னத்தேடி
எங்க ஆபீசுக்கு வந்து
அந்த ஆளைப்போய்பாக்க
ஒதவணும்னு கேட்டாவொ.
வந்தவங்ககிட்ட
பக்கத்து ஊர்ல இருக்க
ஆபீஸ்ல போயி
கடன் வாங்குன ஆளை
பாக்குறது அத்தினி
லேசு இல்ல.
அதனால
அவரோட வூட்டுக்கார
அம்மா வேலை பாக்க
ஸ்கூல் எனக்குத்தெரியும்.
அங்க போவோம்.
அந்த டீச்சரை பாத்து
வெஷயத்தை கொஞ்சம்
அவங்க காதுல
போட்டு வெப்போம்னு
ஐடியா கொடுத்தேன்.
ஸ்கூல்ல போயி
டீச்சரை பாத்து
சங்கதியை
சொன்னோம்.
டீச்சர் ஒண்ணுமே
சொல்லல..
பொலபொலண்ணு
கண்ணுல கண்ணீரு
வடிச்சாட்டாவொ.
அதைப்பாத்ததும்
எங்களுக்கு மனசு கேக்கல.
மேல்கொண்டு
எதுவும் கேக்காம
எங்க ஆபீசுக்கு
திரும்பி வந்துட்டோம்.
அடுத்த தடவை நிதானமா பாக்கலாம்யான்னு
சொல்லிட்டு
வீட்டுவசதி ஆபீஸ்காரவுக
ரெண்டுபேரும் ஒடனே
பாளயங்கோட்டைக்கு
திரும்பி போயிட்டாவொ.
அந்த டீச்சரு
பள்ளிக்கூடம் விட்டு
வீட்டுக்கு போனதும்
மொதவேலயா
புருஷனக் கூப்புட்டு
பள்ளிக்கூடத்துக்கு
கடன் கொடுத்தவொ
தேடிவந்ததால ஏம் மானம்
மரியாதையெல்லாம்
காத்துல பறந்துட்டு.
நீரு என்ன செய்வேரோ
ஏது செய்வேறோ
எனக்குத் தெரியாது.
நாளக்கி
நான் உசுரோட
இருக்கணும்னா,
வெள்ளனயே
கெளம்பிப்போயி
அந்த கடனோட பாக்கியை
அடைச்சுட்டுதான்
வீட்டுக்குள்ள வரணும் ன்னு
கண்ணீர்விட்டு
அழுதிருக்காவொ.
டீச்சரம்மாவோட
வீட்டுக்காரரும்
பயந்து போயி
அங்க இங்க
அலஞ்சு திரிஞ்சு
பணத்தை சரிபண்ணிட்டு
பாளையங்கோட்டைல
இருக்க ஆபீசுக்கு போய்
பாக்கியை அடைச்சிட்டு்
வந்த பொறவு தான்
அவரால வீட்டுக்குள்ள
நொழைய முடிஞ்சுது.
அதுக்குப் பொறவு தான்
டீச்சர் பள்ளிக்கூடத்துக்கு
வேலைக்கு
போயிருக்காவொ."
ன்னு சொடல சொன்னான்.
ஒடனே நான்
"கண்ணியத்தை காக்கணும்னு
கண்ணீரைக்காமிச்சு,
பணம் என்ன பணம்....
பணத்தைவிட
ஏம் மானந்தாம்யா
பெருசு ங்கறமாதிரி
நடந்துகிட.ட அந்த
டீச்சரம்மாவ இப்பொ
நெனச்சாலும்
பெருமையா
இருக்குவே." ன்னு
சொன்னேன்.
அதைக்கேட்ட சொடல
அவொள மாதிரி
கொஞ்சம் ஆளுங்க
இருக்குததுனால
தாம்ல நாட்டுல
மழை பெய்யுது.
தெரிஞ்சுக்கல
எசக்கி"ன்னு
சொன்னான்.
இந்த சேதிய
ஒடனயே ஓடிப்போயி
பேங்குல வேலை பாக்க
ஏம் பெஞ்சாதியோட
தாய்மாமாட்ட சொல்லணும்.
அவருகிட்ட ஒடனே போய்
செல்லையா பொண்டாட்டிட்ட
செல்லையாவோட
கடன் பாக்கி தகவல சொல்லச்சொல்லணும்.
அப்பிடியாவது பணம்
வசூலாகுதாண்ணு
பாப்போம்.
சொடலை குடுத்த இந்த
யோசனை
நல்லா வேல செய்யும்னு
நம்புவோம்.
சேக்காளி சொடல சொடலதான்
No comments:
Post a Comment