**********************************
"ஏல எசக்கி...
எங்கல போய்த்தொலஞ்ச..
நீ இல்லாம எனக்கு
பொழுதே போகல.."
இப்பிடி சொல்லிக்கிட்டே
சேக்காளி சொடல
என்னக்கூப்பிட்டான்.
"ஊருக்குப் போயிருந்தேன்டே"
ன்னு சொல்லிகிட்டே நானும்
அவங்கிட்ட போனேன்.
"இந்த பலவேசத்தோட
மூத்தமவன் சுப்பையாவுக்கு
நல்ல பேரு இருக்கு.
அதேநேரம்ம் சின்னவன்
செல்லையாவுக்கு
நல்ல பேரு இல்லையே..
அது ஏமுல இப்புடி" ன்னு
சேக்காளி சொடல
ஏங்கிட்ட கேட்டான்.
நான் சொன்னேன்..
" பலவேசம் அவரு
வாழ்ந்த காலத்துல
ரெண்டு பயலுவட்டுயும்
நீங்க ரெண்டுபேரும்
யாருகிட்டயும்
கடன் வாங்காம
காலத்தை ஓட்டணும்.
எவனும்
நம்ம வீட்டு வாசல்ல
கடன் வசூலிக்கன்னு வந்து
நிக்கக் கூடாது.
இத மட்டும் நீங்க உறுதியா
கேட்டுநடக்கணும் ன்னு
சத்தியம் வாங்கிட்டாராம்.
மூத்த மவன் சுப்பையா
அவன் ஐயாவுக்கு வாக்கு
கொடுத்தமாதிரி
யாருகிட்டயும்
கடன் வாங்கி
காலந்தள்ளுவது இல்லை.
ஆனா இந்த எளய பயா
ஊர்ல உள்ள
எல்லா பேங்குலயும்
கடன் வாங்கியிருக்கான்.
எல்லா எடத்துலயும்
பாக்கி வச்சிருக்கான்.
நெறய பேருகிட்ட
கை மாத்து கூட
வாங்கியிருக்கான்.
கைமாத்து
கொடுத்தவனுவல்லாம்
கைமாத்து வாங்குன ரூபாய
திருப்பி வரவேண்டாம்.
திருப்பித் தந்துட்டாமுன்னா
மேக்கொண்டு அதிகமாக
கைமாத்து கேப்பான்.
அதுனால
தராம இருந்தாலே
நல்லதுன்னுன்னு நெனய்க்கானுவொ.
இதுனாலதாம்யா
சுப்பையாவுக்கு நல்லபேரு. செல்லையாப்பயலுக்கு
கெட்ட பேரு"
ஒடனே சேக்காளி சொடலை
"அப்படினா செல்லையா அவனோட அய்யாவுக்கு
கொடுத்த சத்தியம்
என்ன ல ஆச்சுன்னு
யாரும் கேக்கலயா" ன்னு
கேட்டான்
அதுக்கு நான் வந்து...
"" நாங் கேட்டனே..
இதே கேள்விய
நான் செல்லையாகிட்ட கேட்டனே.
அதுக்கு செல்லையா
எங்கய்யா யார்ட்டயும்
கடன் வாங்கக்கூடாதுன்னு
ஏங்கிட்ட சத்தியம்
வாங்குனாரு.
அதனால
நான் ஊர்க்கார பயலுவ
எவங்கிட்டயும்
ஒரு பைசா கூட
கடன் வாங்கல.
கவர்மெண்டு பேங்கு
போயி தாம்யா
லோன் வாங்குனேன்.
பக்கத்துல இருக்க
ஒரு சில பயலுவகிட்ட
கை மாத்தும் வாங்குனேன்.
கைமாத்து கொடுத்தவனும் எந்தக்காலத்துலயும்
வீட்டுவாசலுக்கு
வசூல் பண்ணன்னு
வரமாட்டான்.
கெவர்மெண்டு
பேங்கு மேனேஜரும்
வீட்டு வாசலிலுக்கு வந்து
பணத்தை கேக்கமாட்டாரு.
கடுதாசிதான் தபாலுல
அனுப்புவாரு..
அதுனால நான்
எங்க ஐயாவுக்கு
கொடுத்த சத்தியத்தை
கொஞ்சங்கூட மீறல"ன்னு
சொன்னான்.
இது எப்பிடி இருக்கு.
செல்லையாப்பயா
சொல்லுதமாதிரி
கைமாத்து வேற..
லோன் வேற..
கடன் வேற..யோ?
கடன் வாங்குனாதான் திருப்பிக்கொடுக்கணுமோ.?
லோன் வாங்குனா திருப்பி கொடுக்கவேண்டாமோ?"
ன்னு சொடலைகிட்ட
கேட்டேன்.
சோக்காளி சொடல
ஏங்கிட்ட சொன்னான்.
"எறுவு கெட்டபயா..
லோனுக்கும் கடனுக்கும்
இப்படி ஒரு கேடுகெட்ட
வெளக்கம் வேற
கொடுக்கானா
இந்த ஃபிராடுக்கார
செல்லையா பயா.
பேசாம அவன்
வேல பாக்குற கம்பெனிக்கு
பேங்கு மேனஜர
லெட்டர் எழுத
சொல்லணும்.
அப்பத்தான்
இந்தப்பயா
சரியா வருவான்.
பேங்குக்கும்
பணம் வசூலாகும்"
சொடல யோசனைய
பேங்கு மேனேஜர்
கேப்பாரா?
செல்லையா மாதிரி
நெறய பேரு இருக்கானுவொ.
No comments:
Post a Comment