Wednesday, 21 February 2018

பழையது வேண்டுமா?

பாளையங்கோட்டையில்
எனது உறவினர் ஒருவர்.

ஏறத்தாழ எனது வயதுதான்.

எனக்கு நல்ல நண்பரும்கூட.

அவரது குடும்பம் பாரம்பரியம்
மிக்க குடும்பம்.

பழம் பெருமை பேசிக்கொண்டே
இருப்பார்கள்.

நண்பர் ரம்மி விளையாட்டில்
வல்லவர்.

ஞாயிறுதோறும் தவறாமல்
யார் வீட்டிலாவது வைத்து
ரம்மி ஆட்டம் உண்டு.

ஒரே வீட்டில் வைத்து
விளையாடினால் வீட்டம்மா
திட்டுவார்கள் என்று
ஒவ்வொரு ஞாயிறும்
வெவ்வேறு நண்பர்கள்
வீட்டில் வைத்து நாள்முழுதும்
நடைபெறும்.

யார் வீட்டில் வைத்து
ரம்மியாட்டம்
நடைபெறுகிறதோ அவர்
வீட்டில் மதிய விருந்து
அவரது முழுச்செலவில்.

என் நண்பர் தனது
வீட்டம்மாவிற்கு பயந்தவர்.

அதனால் ரொம்ப காலம்
அவர்வீட்டில் வைத்து சீட்டாட
அவர் தட்டிக்கழித்து வந்தார்.

நண்பர்கள் எல்லோரும்
ஒன்றாகச்சேர்ந்து  நண்பரிடம்
"இந்த முறை கண்டிப்பாக
உங்கள் வீட்டில் வைத்துத்தான்
சீட்டு விளையாட்டு"
என்று அடித்துக்கூறிவிட்டனர்.

நண்பருக்கு தர்ம சங்கடம்.

நண்பர்களையும்
சமாளிக்கவேண்டும்.

வீட்டில் மனைவியையும்
சமாளித்து சம்மதம்
பெறவேண்டும்.

நண்பர் வீட்டம்மாவிடம் சென்று
"ஞாயிற்றுக்கிழைமை காலையில்
நண்பர்கள் பொழுதுபோக்க
நமது வீட்டிற்கு வருகிறார்கள்"
என்று பணிவாகக் கூறுகிறார்.

மனைவியும் மறுப்பேதும்
கூறவில்லை.

இதுவே நண்பருக்கு
மகிழ்ச்சியைத்தந்தது.

"மதிய உணவு நம் வீட்டில்"
என்று சொன்னதும் மனைவி அதற்கும்
"சரி ....நல்லது...
பழையதுதான் போடுவேன்
பரவாயில்லையா" என்கிறார்.

நண்பர் தனது மனைவி
விளையாட்டாகப்பேசுவதாக
நினைத்துக்கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

ஒருநாளும் காய்கறி வாங்க
சந்தைக்கு செல்லாத நண்பர்
அன்று காலையிலேயே
சந்தைக்குச்சென்று
நிறைய காய்கறிகள் வாங்கி
மனைவியிடம் தருகிறார்.

பத்துமணிவாக்கில்
நண்பர்கள் கூட்டம் வருகிறது.

மனைவி அவர்களை
மகிழ்ச்சியுடன் வரவேற்பதை
நண்பர் பார்க்கிறார்.

உடனே மனைவியை
அடுக்களையில் சந்தித்து
"நிறைய கறிவகை களுடன்
சாப்பாடு தயாரித்து வைம்மா"
என்று கேட்டுக்கொள்கிறார்.

அவரது வீட்டம்மாவும் அவரிடம்
"நீங்க கவலைப்படாம போங்க
நல்லபடி பழையது கிடைக்கும்"
என்று சொல்கிறார்.

நண்பர் மனைவியைப்பார்த்து
"விளையாடாதே  அம்மா..
நான் அவர்கள் வீட்டிற்கு
சென்றபோதெல்லாம்
அந்த வீட்டு அக்காமாரெல்லாம்
வகை வகையாக செய்து
போட்டிருக்கிறார்கள்.

நம்ம வீட்டில் உணவு சரியில்லை
என்றால்  என் மானத்தை
வாங்கிவிடுவார்கள். காப்பாத்து"
என்று கெஞ்சுகிறார்.

"நீங்க போய் நிம்மதியா
சீட்டு விளயாடுங்க" என்று கூறி
அனுப்பிவைக்கிறார்.

நண்பர் சீட்டு விளையாடும்போது
ஒரு வித பதட்டத்துடனேயே
காணப்படுகிறார்.

மதியம் ஒரு மணியானதும்
சாப்பாட்டு இடைவேளை
அறிவிக்கப்படுகிறது.

சாப்பாடு பரிமாறுவதற்கு முன்
அடுக்களைக்குச்சென்று
"எல்லாம் நல்லபடி முடிந்ததா"
என்று மனைவியிடம் கேட்கிறார்.

மனைவியும்
"எல்லாம் அருமையாக முடிந்தது"
என்று கூறிவிட்டு
"பழையதை பரிமாறவா"
என்றும் கேட்கிறார்.

நண்பருக்கு
அடிவயிற்றைக் கலக்குகிறது.

நடப்பது நடக்கட்டும் என்று
நண்பர்களுடன் சாப்பாட்டிற்கு
அமர்கிறார்.

சாப்பாடு பரிமாறப்படுகிறது.

சொதி, இஞ்சிப்பச்சடி,
உருளைக்கிழங்கு பொறியல்,
வடை, பருப்பு பாயசம்
என தடபுடல் விருந்து.

நண்பர்கள் சாப்பாட்டு
ருசியை பாராட்டி பாராட்டுமழை
பொழிகிறார்கள்.

விருந்து முடிந்ததும் நண்பர்களை
மாடிக்கு அனுப்பிவிட்டு நண்பர்
மனைவியிடம் செல்கிறார்.

"நல்ல ருசியான சமையலை
செய்து வைத்துவிட்டு பின்
ஏனம்மா என்னிடம் பலமுறை
பழையது பழையது
என்று சொல்லி பயமுறுத்தினாய்"
என்று கேட்கிறார்.

இப்போதும் மனைவி
"நான் சமைத்த்தும்  பரிமாறியதும்
உண்மையிலேயே பழையது தான்"
என்று அடித்துச் சொல்கிறார்.

நண்பர் "எப்படி ம்மா"
என்றுகேட்கிறார்.

"உங்க தாத்தா
குப்பாம்பிள்ளைக்கு
பத்து ஏக்கர் விவசாய நிலமும்
பத்துகிலோதங்க நகைகளும்
இருந்தன,

அவர் இறந்துபோகும் போது
ஐந்து ஏக்கர் விவசாய நிலமும்
ஐந்து கிலோ தங்கநகைகளும் தான்
உங்க அப்பா சுப்பையா பிள்ளை
கைக்கு வரும்போது இருந்தன.

அவங்க காலத்துக்குப்பிறகு
ஒங்க கைக்கு வரும்போது
விவசாய நிலம் ஒரு ஏக்கராகவும்
தங்க நகைள் 50 பவுனாகவும்
கொறைஞ்சு போச்சு.

சொடலையாபிள்ளையான
உங்களிடமிருந்து
என்  மகன் எசக்கிக்கு எதாவது
கிடைக்குமான்னும் தெரியல.

அவன் படிச்சு எல்ஐசியில
வேலைபார்ப்பதால்
எனக்கு பெரிய நிம்மதி.

சும்மா ஒக்காந்தே தின்றால்
இப்படித்தானே ஆகும்.

நீங்களோ உங்க அப்பாவோ
ஒங்க சம்பாத்தியத்திலிருந்து
குடும்ப சொத்தோடு
ஒரு பைசாவாவது சேர்த்து
வைத்திருக்கிறீர்களா?

உங்க தாத்தா சம்பாத்திச்ச
பழைய சொத்திலிருந்துதான்
இப்போது சோத்தை
நாம் சாப்பிடுகிறோம்.

அதனால்தான்
உங்கள் நண்பர்களுக்கு
பரிமாறியது பழையது என்று
மீண்டும் மீண்டும் கூறினேன்."

மனைவி சொன்னதைக்கேட்ட
நண்பருக்கு செருப்பால
அடிச்சமாதிரி இருந்தது.

65 வயதுக்குமேல்
அவரால் இனி என்ன
பண்ண முடியும்.

மனைவி சொன்னதை
பொறுமையாகக்
கேட்டுக்கொண்டார்.

உள்ளுக்குள் அழுது
தனது ஆற்றாமையைத்
தீர்த்துக் கொண்டார்.

இயலாமையை நினைத்து
நொந்து கொண்டார்.

நம்ம முகவர்கள் சம்பாதிக்கும்
புது வணிக வருமானமும்
முன்பு செய்த வணிகத்திற்காக
கிடைக்கும் தொடர் வருவாயும்
பழையதும் புதிய உணவும் கலந்த
ஒரு கலவை தான்.

முகவர்கள் முன்பு செய்த
வணிகத்தில் தொடர்ந்து
கிடைப்பது தான்
ரின்யூவல் கமிஷன் என்ற
பழையது.

ஏனென்றால் முகவருக்குப்பின்
இது குடும்பத்திற்குத்தானே
தவறாமல் போகிறது.

என்னுடைய கருத்துப்படி
முகவருக்குப் போகும்
•ரின்யூவல் கமிஷன்•
முகவரது குடும்பத்தின் சொத்து.

இது அவர்களின் பழையது.

இதில் கை வைக்க
முகவருக்கு  எந்த
உரிமையும் கிடையாது.

குடும்பச்செலவிற்கு அவர்
புது வணிகம் மூலம் வருகின்ற
முதல் வருட கமிஷனை மட்டுமே
பயன்படுத்தவேண்டும்.

அதற்காக அவர் தொடர்ந்து
உழைக்கவேண்டும்.

உழைத்துக்கொண்டே
இருக்கவேண்டும்.

அவருக்கு ஓய்வே
கிடையாது.

பழையதைத்தொடாமல்
புதிய உணவையே
அருந்தவேண்டும்.

சரிதானா
நண்பர்களே.

No comments:

Post a Comment