Friday, 16 December 2016

சொல் வித்தை அனகன்

நான் சிட்னி வந்த போது
அக்டோபர் மாதம் நடந்த
ஆஸ்திரேலிய கம்பன் கழக
பத்தாம் ஆண்டு விழாவில்
கலந்து கொண்டேன்.
அங்கு இவரைக்கண்டு
அறிமுகமானேன்.

அடுத்து நவம்பர் மாதம்
ஆஸ்திரேலிய
தமிழ் கலை மற்றும்
பண்பாட்டுக்கழகத்தால்
ஏற்பாடு செய்யப்பட்ட
திரு நெல்லைக்கண்ணன் அவர்கள்
பேசிய இலக்கிய கூட்டத்தில்
கலந்துகொண்டபோது
விரிவாக உரையாடினேன்.

முகநூலில் இவரது நண்பராக
இணைந்து கொண்டேன்.

அடுத்து வந்த நாட்களில்
முருகன் கோவில் வளாகத்தில்
ஏற்பாடு செய்யப்பட்ட
திரு நெல்லைக்கண்ணன் அவர்களின்
ஆன்மீகக் கூட்டத்தில் 
கலந்து கொண்டபோது
மீண்டும் நெருக்கமாகி
நண்பரை சகோதரராக
மாற்றிக் கொண்டேன்.

தமிழகத்தின் மறைந்த
முன்னாள் முதலமைச்சர்
நினைவைப்போற்றி 7-12ல்
இந்திய தூதரக அலுவலகத்தில்
ஏற்பாடு செய்யப்பட்ட
இரங்கல் கூட்டத்தில்
கலந்து கொண்டு
கவி பாடியபோது
அந்நிகழ்ச்சியை
நல்ல முறையில்
ஏற்பாடு செய்த
பாங்கைக் கண்டு
மனதாரப்பாராட்டி
உளமாற மகிழ்ந்தேன்.

ஒரு சில நாட்களில்
நண்பர் ரங்கராஜன்
இல்லத்தில் நடைபெற்ற
ஐயப்பன் வழிபாட்டில்
கலந்து கொண்டபோது
பல்வேறு செய்திகளை
பாசத்துடன்
பகிர்ந்து கொண்டோம்.

அன்று மாலை
துர்க்கை அம்மன் கோவில்
வளாகத்தில் நடைபெற்ற
விருந்துக்கும் அழைத்தார்.
இயலாமையை தெரிவித்து
வருந்தினேன்.

இவர் ஒரு மதுரைக்காரர்.
மயக்கும் பேச்சாளர்.
எழுச்சி எழுத்தாளர்.
கவர்ந்திழுக்கும்  கவி பாடி
அரங்கத்தை அதிரவைக்கும்
சிந்தனைக் கவிஞர்.

தலைமைப்பண்புகளை
தாராளமாய் கொண்டுள்ள
தன்னிகரில்லாத் தலைவர்.

எந்த நிகழ்ச்சியில்
எப்போது கலந்து கொண்டாலும்
அப்போதே அவை தொடர்பான
காட்சிப்படங்களை
தனது முகநூலில்
பதிவேற்றும் வேகம் கண்டு
வியந்திருக்கிறேன்.

இவர் சிட்னி மாநகரில்
கட்ந்த ஐந்து ஆண்டுகளில்
நடைபெற்ற பல்வேறு
பட்டிமன்றங்களிலும்,
கவி அரங்கங்களிலும்
பங்கெடுத்து பைந்தமிழை
சிறப்பித்திருக்கிறார்.

சிட்னியில் நடக்கும்
தமிழ் நிகழ்ச்சிகள்,
தமிழர் விழாக்கள்,
பள்ளிக்கூட நிகழ்ச்சிகள்,
பெற்றோர் விழாக்கள்,
ஆட்சியாளர்களுடன்
கலந்துரையாடல்,
என பலதரப்பட்ட
நிகழ்ச்சிகளிலும்
முன்னால் நிற்பவர்.

இங்குள்ளவர்கள்
சந்திக்கும் சவால்களை
சாதுர்யமாக எடுத்துரைத்து
சிக்கல்களை அவிழ்க்க
சிரமம் பார்க்காமல்
பணியாற்றும் பண்பாளர்.

தமிழால்.....
எல்லோருடனும் இணைபவர்.
எல்லோரையும் இணைப்பவர்.

இந்த மதுரைத்தங்கம்
பணிபுரிவது இங்குள்ள
"காமன் வெல்த்" வங்கியின்
தகவல் தொழில் நுட்பத்துறையில்.

செம்மையாகச்
செயல்பட்டுவரும்
ஆஸ்திரேலிய
கலை மற்றும்
பண்பாட்டுக் கழகத்தின்
கட்டுப்பாடு நிறைந்த
தலைவர் இவர்.

இந்த சகோதரர் மூலம்
எனக்குக்கிடைத்த
நண்பர்கள் பலர்.

இத்தனை பெருமைக்கும்
பாராட்டிற்கும் உரிய
அன்புச்சகோதரர் தான்
திரு அனகன் பாபு.

அவரிடம் பேசும்போது
"அனகன்" என்பது
அர்ச்சுனனின் பெயர் என
அறிந்து கொண்டேன்.

காவியத்தலைவன்
அர்ச்சுனன்
வில்வித்தையில் சிறந்தவர்.
இந்த  நமது அனகன்
சொல் வித்தையில் சிறந்தவர்.

No comments:

Post a Comment