Sunday, 11 December 2016

இரங்கல் பா...ஜெ.ஜெ..

மறைந்துவிட்ட
முதலமைச்சர்..
தமிழர்களின்
நெஞ்சில் நீங்காது
நிறைந்துவிட்ட
முதலமைச்சர்..

அவரது புகழ்பாடவும்
கண்மூடி ஆதரிக்கவும்
நான் ஒன்றும்
கரை வேட்டி கட்டி
உலாவரும் அவரது
கட்சிக்காரன் இல்லை.

எதைச்சொன்னாலும்
எதைச்செய்தாலும்
எதிர்க்க வேண்டிய
நிலையில் உள்ள
எதிர்க்கட்சிக்காரனுமில்லை.

கைதட்டி பாராட்டி
விசிலடித்து மகிழ்ந்திட
அவரது ரசிகனுமில்லை.

இவர்தான் சிறந்தவர்
என்று குரலை உயர்த்தி
சாதித்துப் பேச இவரது
ஜாதிக்காரனுமில்லை.

கொள்கை முடிவுகளை
வரவேற்று வாழ்த்தியவனுமில்லை.

கோலோச்சிய முறையை
கொண்டாடி
மகிழ்ந்தவனுமில்லை.

" I agree" என்று சொல்லி
அக்ரி கலாச்சாரத்தை
பயிரிட்டு வளர்க்கும்
அரசு அலுவலருமல்ல.

சொல்லப்போனால்
அவரது கட்சிக்கு
வாக்களித்த
வாக்காளனுமில்லை.

நான் ....
கட்சி சார்பற்ற ஒரு
நடுநிலையாளனே..

பல இடங்களில்
பல நேரங்களில்
தான் பெற்ற
அவமானங்களையே
அடித்தளமாக்கி
அரசுக்கட்டிலில் அமர்ந்து
ஆட்சி செய்த
அவரின் ஆளுமை
எனக்குப்பிடிக்கும்.

ஆணாதிக்கம் நிறைந்த
ஆர்ப்பாட்ட அரசியலில்
பின்புலமேதுமின்றி
தனி ஒரு பெண்ணாக
முயன்று முன்னேறிய
துணிச்சல் பிடிக்கும்.


அனைத்தையும் அலசி
ஆராய்ந்து சரியான
முடிவெடுக்கும்
அறிவாற்றலின் ஆழம்
அதிகம் பிடிக்கும்.

அறிஞர்களே வியக்கும்
இவரது ஆங்கிலப்புலமை
நிரம்பப்பிடிக்கும்.

துரோகம் செய்பவர்களை
தூக்கி எறியும் இவரது
துணிச்சல் பிடிக்கும்.

பகுத்தறிவு பேசியவர்களை
பாதங்களில் விழுந்து
வணங்க வைத்த
வைராக்கியம் பிடிக்கும்.

அவர்களையும்
பக்திமான்களாக மாற்றிய
பக்குவம் பிடிக்கும்.

நினைத்ததை முடிக்கும்
நெஞ்சுறுதி
நிறையவே பிடிக்கும்.

அனைவரையும் வீழ்த்தும்
அதிரடி அரசியல்
எப்போதுமே பிடிக்கும்.

கழுத்தில் கை போட்டு
கழுத்தறுக்காமல்

குளிர்ச்சியாய் பேசி
குழி பறிக்காமல்

நல்லவன் வேடம் போட்டு
நயவஞ்சகமாக
ஏமாற்றாமல்

வெட்டொன்று
துண்டு இரண்டாக
வெளிப்படையாக
வார்த்தைகளைக்கொட்டும்
கள்ளம் ஏதுமில்லா
வெள்ளை மனம் பிடிக்கும்.

மறக்கமுடியாத
நாவினால் சுடப்பட்ட
வடுக்களை
நினைத்து நினைத்து
அடுக்கடுக்காய்
பதிலடி கொடுத்து
பழிவாங்கும்
போர்க்குணம் பிடிக்கும்.

வியூகம் அமைத்து
எதிரிகளை வீழ்த்தும்
விவேகம் பிடிக்கும்.

பணிந்து போகாமல்
துணிந்து எதிர்க்கும்
வீரம் பிடிக்கும்.


அணி யே வேண்டாம்
தனி யே நிற்பேன்
என்று ஆர்ப்பரித்த
தன்னம்பிக்கை
அதிகம் பிடிக்கும்.

தோல்விகளைக்கண்டு
சோர்ந்து போகாமல்

துயரங்களைக்கண்டு
துவண்டுபோகாமல்

மீண்டும் மீண்டும்
துளிர் விடும்
விடாமுயற்சி
நிறையவே பிடிக்கும்.

சறுக்கல்களையும்
வழுக்கல்களையும்
அவ்வப்போது சந்தித்து
உலகில் உயர்ந்துகாட்டிய
உற்சாகம் பிடிக்கும்.

உழைப்பவர்களை கண்டு
உயர்த்தி விடும்
உன்னதப் பண்பு பிடிக்கும்.

நடிப்பவர்களை கண்டால்
உருட்டி விடும்
நக்கீரக்குணம் பிடிக்கும்.


எல்லாம் இழந்து
ஆதரவற்று நின்ற
ஈழத் தமிழருக்கு
ஆதரவுக் கரம் நீட்டிய
அன்னைக்குணம்
பிடிக்கும்.

இவரை
நம்பாமல்  வீழ்ந்தவர்கள்
நாட்டில் பலருண்டு..

இவரை நம்பி
நன்றாக வாழ்ந்து
செழித்தவர்கள்
நாடு முழுக்க உண்டு.

இவரது
கடைக்கண் பார்வையால்
உச்சம் தொட்ட
சருகுகளும் உண்டு.

சுட்டெரித்து குப்பையில்
தள்ளிவிடப்பட்ட சில
கலசங்களும் உண்டு.

இந்த இரும்பு மங்கை
பலருக்கு கரும்பு மங்கை.

சிலருக்கோ காதில்
நுழைந்து குடைச்சல்
கொடுக்கும்
எறும்பு மங்கை.



மொத்தத்தில் 
இவரது

திடமான முடிவு..
தளர்வறியா
தன்னம்பிக்கை..
தீர்க்கமான சிந்தனை..
விடாமுயற்சி..
யாருக்கும் அஞ்சாமை..
உறவிற்கு உறுதியாக
கைகொடுத்தல்..
உரிமைக்கு ஓங்கி
குரல் கொடுத்தல்..
அனைவரையும்
அன்பாலும்
கண்டிப்பாலும்
கட்டிப்போடும்
கட்டுப்பாடு...

இவையெல்லாம்
இவரிடம்  பிடித்த
குணநலன்கள்.

மறைந்துவிட்ட இந்த
இரும்பு மங்கையை
போற்றுவோம்.

இவரது மறைவை
கொஞ்சம் கொஞ்சமாக
மறக்க முயற்சிப்போம்.

நினைவை எப்போதும்
நெஞ்சிலிருத்துவோம்.

மீண்டும் சொல்கிறேன்.

நான்...

அவரது புகழ்பாடவும்
கண்மூடி ஆதரிக்கவும்
நான் ஒன்றும்
கரை வேட்டி கட்டி
உலாவரும் அவரது
கட்சிக்காரன் இல்லை.


ப.இசக்கிராஜன்.

No comments:

Post a Comment