Tuesday, 10 May 2016

தாய்...

அன்னை....
அருமையான
தமிழ் வார்த்தை...

ஆனாலும்
யார்யாரையோ
நினைவிற்குக்
கொண்டுவரும்
வார்த்தை.

அம்மா...
அழகான
தமிழ்ச்சொல்..

ஆனாலும் யாரோ
நினைவில்வந்து
மிரட்டும்
வார்த்தை.

தாய்...
இனிமையான
தமிழ்ச்சொல்.
பெற்றதாயைமட்டுமே
நினைவிற்கு
கொண்டுவரும்
வசிய வார்த்தை.

இன்று...
உலக அளவில்
தாயை
நினைத்து
மகிழ்ந்து
போற்றிப்
புகழ்ந்து
வணங்கிடும்
வரலாற்றுச்
சிறப்புநாள்.

என் தாய்..
அவள் மெய்..

அவளின்
உதிரம் நான்.

உயரத்தில் அவள்
குள்ளம்.

உள்ளத்தில் இல்லை
கள்ளம்.

அவளின்றி
நான் இல்லை.

என்னை...
பெற்றவள்.
வளரத்தவள்.
பேணியவள்.
நெறிப்படுத்தியவள்.

மகளாக நினைத்து
மஞ்சள்தேய்த்து
குளிப்பாட்டியவள்.

பாவாடை அணிவித்து
பார்த்து ரசித்தவள்.

எதைவைத்தாலும்
சாப்பிடுவான் என்று
சொல்லிச்சொல்லி
அனுசரனை குணத்தை
அள்ளிக் கொடுத்தவள்.

வீட்டு வேலைகளில்
உதவுபவன் என்று
பிறரிடம் உரக்கக்கூறி
உதவிடும்
மனப்பான்மையை
உயர்த்த உதவியவள்.

காபியில் ...
நஞ்சு இருக்கிறது
என்று சொல்லி சொல்லி
அந்த பழக்கத்தை
அண்டவிடமல் அடித்து
விரட்டியவள்.

என் "துரை"
நன்றாகப்படிப்பவன்
என்று பிரகடனம் செய்தே
என்னை படிப்பில்
முந்தியிருக்கச்செய்தவள்.

என் சிரிப்பை பாரத்து
மகிழ்ந்தவள்.

ஆரம்பகால
வளர்ச்சியை பார்த்து
ஆனந்தமடைந்தவள்.

பேரக்குழந்தைகளின்
குறும்பை ரசித்த
குதூகலத்தோடு
கண்ணை
மூடியவள்.

விண்ணிலிருந்தபடியே
முழுவளர்ச்சியையும்
கண்டு களிக்கிறாள்.
காத்தருளுகிறாள்..

"தாயார்" நாளில்
இந்த......
ராஜனைப்பெற்ற
ராஜம்மாவை
நினைத்துத்
துதிக்கிறேன்.

வாழ்க அவள் நினைவு.
வளரட்டும் அவளருள்..

பெற்றெடுத்தால்தான்
தாயா?...
பெற்றெடுக்காத
மற்ற தாய்மாரையும்
இத்திருநாளில்
வணங்குகிறேன்

No comments:

Post a Comment