Sunday, 8 September 2019

அந்த நாள் ஞாபகம்.....


அந்த நாள் ஞாபகம்.....

பாளையங்கோட்டை தூய சவேரியார் உயர்நிலைப்பள்ளியில், 1964 முதல் 1970 வரை "A" பிரிவில் SSLC முடிய என்னுடன் படித்த மாணவர்களுக்கு 2019-20ம் ஆண்டு பொன்விழா ஆண்டு ஆகும். அந்த பிரிவின் மாணவர்கள் நாங்கள் எங்கள் நினைவுகளை போற்றும் வண்ணம் இன்று நாங்கள் படித்த பள்ளியிலேயே ஒன்று கூடினோம்.  பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட் தந்தை அகஸ்டின் ஜான் பீட்டர் அடிகளார் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார்கள். இந்த கூட்டத்திற்கு எங்களுக்கு ஆசிரியர்களாக இருந்து வழியும் ஒளியும் காட்டிய திரு பீட்டர் ஃபிடெலிஸ் அவர்களும், திரு தனம் அவர்களும் வந்திருந்து எங்களை வாழ்த்தியும் ஆசி வழங்கியும் பேசினார்கள்.
வந்திருந்தோரை எங்களில் ஒருவரும், நெல்லை ம. தி .தா. இந்துக்கல்லூரியின் மேனாள் முதல்வருமான முனைவர் நமச்சிவாயம் அவர்கள் வரவேற்றுப் பேசினார்கள். நாங்கள் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி எங்களுக்கு ஆறுமுதல் எட்டாம் வகுப்புவரை வகுப்பு ஆசிரியராக இருந்து வழி நடத்திய திரு சுப்ரமணிய ஐயர் அவர்களின் நினைவாக ஏழை மாணவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறோம். ஆறாம் வகுப்பு மாணவர்கள் ஐந்து பேருக்கு, ஏழாம் வகுப்பு மாணவர்கள் ஐந்து பேருக்கு, எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஆறு பேருக்கு, என்று கல்வி உதவித் தொகை கடந்த வாரம் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் வழங்கப்பட்டன.
பயன் பெற்ற மாணவர்களும் வந்திருந்து, தங்களின் நன்றி உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்கள்.
பள்ளியின் பழைய மாணவர்கள் சங்க பொறுப்பாளர்கள் திரு பரமசிவனும், திரு பால் கதிரவன் அவர்களும், எங்களது இந்த முயற்சிகளைப் பாராட்டி, வாழ்த்திப் பேசினார்கள்.
ஆசிரியர் திரு சுப்ரமணிய ஐயர் அவர்களின் புதல்வர் திரு கல்யாணி அவர்களும், பேரன்மாரும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
கலந்துகொண்ட நாங்கள் ஆசிரியர்களுக்கும், கல்வி நிறுவனத்திற்கும் மிகவும் கடமைப்பட்டவர்கள் என்ற கருத்தை ஆழமாக எடுத்துரைத்தோம்.
விஜயன் அருள் ஜெபராஜ் என்ற ஒய்வு பெற்ற மின்வாரிய பொறியாளர், தனது நேர்மைக்கும், உண்மையான உழைப்பிற்கும், மொழி ஆளுமைக்கும், தூய சவேரியார் பள்ளியும் ஆசிரியர்களும் தான் முழு முதற் காரணம் என்று தெரிவித்தார்.
எங்களின் அனைத்து கூட்டங்களையும் திறம்பட நடத்தி வரும் திரு குமாரை அனைவரும் பாராட்டிப் பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எங்களில் மூவர்களின் இல்லத்தரசிகளான திருமதி கோமதி நமச்சிவாயம், திருமதி பாக்கியலட்சுமி இசக்கிராஜன், திருமதி மஹாலக்ஷ்மி நாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நான், குமார், நமசிவாயம், ரூபன், பால்ராஜ், விஜயன் அருள், வேணுகோபால்,ரங்கன், ராமசுப்ரமணியன், ஜாண், திருமூலநாதன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தோம்.
மாணவர்கள் நாங்கள்,  கடந்து வந்த பாதை பற்றியும், பெற்ற அனுபவங்கள் பற்றியும்  விரிவாகப் பேசினேன்.
திரு குமார் அவர்கள் நன்றி கூறினார்.

-பாளை ப.இசக்கிராஜன் 

1 comment: